கோமதியும், அவர்கள் மகள் சுதியும் அவனை ஆசையுடன் வரவேற்றுக் காரில் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்கள். சுமதிதான் எவ்வளவு நல்ல பெண்! தன்னுடைய மேஜையிலேயே பாலுவின் புஸ்தகங்களை வைத்துக் கொள்ளச் சொல்கிறாள். தன்னுடைய விளையாட்டுச் சாமான்கள் அவனுக்குத்தான் என்கிறாள் அவள் கண்களைச் சுழட்டிப் பேசி கலீரென்று சிரிக்கும் போதெல்லாம் பாலு மெய்ம்மறந்து போகிறான்.
"ஏலே பையா! நீ நீச்சல் கத்துக்கொள்ளடா, உடம்புக்கு நல்லது" என்கிறார் மாமா நாகராஜன்.
பவானி வியர்க்க விறு விறுக்க வருகிறாள். "அண்ணா ! இந்த மாதிரியெல்லாம் அவனுக்கு இடங் கொடுக்காதே! அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அங்கேதான் ஆற்றிலும் குளத்திலும் குதித்துக் கொண்டிருந்தானே! போதும் அண்ணா!"
"அதெல்லாம் வேண்டாம் மாமா" என்று பரிதாபமாகச் சொல்லிவிட்டு பாலு சுமதியிடம், "இந்த ஊரிலே விசிறிக்கு காம்பு நீளமா குட்டையா?" என்று கேட்கிறான்.
"ஏண்டா பாலு! விசிறியெல்லாம் இங்கே அடுப்பு விசிறத்தான் உபயோகப்படும். காற்று வேணுமா உனக்கு? இந்தா ...பட்..." என்று மின் விசிறியின் பொறியைத் தட்டி விடுகிறாள் சுமதி.
காற்று சுழன்று சுழன்று வேகமாக அடிக்கிறது.
”அப்பா! என்ன காற்று மனசுக்கு சுகமாக இதமாக இல்லையே” என்று பாலு திணறுகிறான். அந்தத் திணறலில் தவித்து ' பொத்' தென்று விழுகிறான்.
கண் விழித்துப் பார்த்தபோது பவானியின் மடியில் படுத்துக்கொண்டிருந்தான் பாலு.