”ஆமாம் பாலு! திருடன் நிம்மதியாகத் தூங்க மாட்டான். அப்படித் தூங்கினாலும், அவனைப் போலீஸார் பிடித்துக் கொண்டு போவதாகவும், சிறையில் கல் உடைப்ப-தாகவுமே அவன் கனவு கண்டு கொண்டிருப்பான். அவனவன் செய்கைகளைப் பொறுத்தே இருக்கிறது உள்ளத்துக்குக் கிடைக்கும் ஆறுதல்" என்றார் கல்யாணம்.
இந்த உபதேசங்களைக் கேட்கவே பிடிக்கவில்லை மூர்த்திக்கு. ‘வயசான இந்தக் கிழங்களே இப்படித்தான் பெரிய சாமியார் மாதிரி வேதாந்த பாடம் சொல்லிக் கொடுக்கிறார் குழந்தைப் பையனுக்கு’ என்று நினைத்தான் மூர்த்தி.
அப்பொழுது பவானி வீட்டை அடைந்தாள். "இன்றைக்கு என்ன அம்மா கோவிலில் ரொம்ப நாழிகை இருந்து விட்டாய்? ஏதாவது உற்சவமா என்ன?" என்று கேட்டார் கல்யாணம்.
"வீட்டில் இருப்பதைவிட அங்கே இருந்தால் எவ்வளவோ ஆறுதலாக இருக்கிறது மாமா. உலகத்திலே எனக்குச் சில கடமைகள் இருப்பதால் வீடு என்றும் வாசல் என்றும் இருந்து பார்த்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் இப்படியே எங்காவது புண்ணிய ஸ்தலங்களாகப் பார்த்து வட்டு வரலாம்" என்றாள் பவானி.
கல்யாணராமன் சிரித்தார். ”ஒவ்வொருவரும் இப்படி விரக்தியடைந்து கிளம்பி விட முடியுமா? அதைச் சரியென்றும் நான் சொல்ல மாட்டேன். உனக்கு வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே" என்றார்.
"எனக்கா? வாழ்க்கையில் எனக்கு என்ன மாமா தேவை? காலை மலர்ந்து பகலாவதற்குள் கருகிப் போன என் வாழ்க்கையில் இன்னும் என்னவோ பாக்கி இருக்கிற மாதிரிச் சொல்லுகிறீர்களே!"
”அப்படியெல்லாம் மனசை அலட்டிக் கொள்ளக் கூடாதம்மா. பாலு படித்துப் பெரியவனாகிவிட்டால் அப்புறம் உனக்கு வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் இருக்கப் போகிறது!" என்றார் கல்யாணம்.