”பவானி! இந்தா! உன் தமையன் தந்தி அடித்துக் கடிதமும் போட்டிருக்கிறான். உன் மன்னிக்கு உடம்பு சரியில்லையாம். உடனே உன்னைச் சென்னைக்குப் புறப்படச் சொல்லி இருக்கிறது. மற்ற விவரங்கள் கடிதத்தில் இருக்கும். படித்துப் பாரம்மா!" என்று
அவளிடம் கடிதத்தையும் தந்தியையும் கொடுத்தார்.
பவானி கைகள் நடுங்க கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். அதில் கோமதிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு ரொம்பவும் அபாயகரமான நிலையில் ஆஸ்பத்திரியில் கிடப்பதாகவும், வீட்டையும் குழந்தை சுமதியையும் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை யென்றும் பவானியை உடனே புறப்பட்டு வரச் சொல்லியும் எழுதி இருந்தான் நாகராஜன்,
பவானியின் உள்ளத்தில் இருந்த பழைய சோர்வெல்லாம் எங்கேயோ போய்விட்டது. புதிய கவலை பரபரப்பு. அவள் உள்ளத்தில் குடி கொண்டது.
"என்ன மாமா செய்வது?" என்று கேட்டாள் கல்யாணத்தைப் பார்த்து.
”என்னம்மா இப்படிக் கேட்கிறாய்? உடன் பிறந்தவன் உன் உதவியை நாடி எழுதி இருக்கிறான். நீ போய்த் தான் ஆக வேண்டும்."
”பாலுவுக்குப் பள்ளிக்கூடம் திறக்க இன்னும் ஆறு தினங்கள் தானே இருக்கின்றன?"
”அதைப்பற்றிப் பிறகு யோசித்துக் கொள்ளலாம். நீ நாளைக்கே புறப்பட்டு விடு" என்றார் கண்டிப்பாக.
வெளியே போயிருந்த பாலு வீட்டுக்கு வந்ததும் பவானி விஷயத்தைச் சொன்னாள். ’பாவம் சுமதி' என்றான் அவன்.
பவானியும் ஆசையுடன் அவன் தலையைக் கோதி விட்டு, ”பாலு! நீ எங்கேயும் வெளியே போய் விடாதேடா. சாமான்களை யெல்லாம் கட்டி ஓர் அறையில் போட்டுவிட வேண்டும் வருவதற்கு நாள் ஆனாலும் ஆகலாம். கூடமாட எனக்கு ஒத்தாசை பண்ணுகிறாயா?" என்று கேட்டாள்.