இன்று தான் தலைக்கு ஜலம் விட்டுக் கொண்டீர்கள். அலைய வேண்டாம்" என்று பவானி தடுத்து விட்டாள்.
பாலு மட்டும் உற்சாகத்துடன் இருந்தான். புது ஊரைப் பார்க்கப் போகிறோம் என்கிற களிப்பு அவன் முகத்தில் படர்ந்திருந்தது.
வண்டி தெருக்கோடியைக் கடந்து பசுபதி கோவி லைத் தாண்டிச் செல்ல ஆரம்பித்தது.
ஆடி அசைந்து போகும் வண்டியில் பவானி சிந்த னையே உருவாக உட்கார்ந்திருந்தாள். நோயாளி வாசுவை அழைத்துக்கொண்டு இப்படித்தான் ஒரு நாள் அந்த ஊருக்குள் வந்தாள். இன்று பாலுவை அழைத்துக் கொண்டு மறுபடியும் ஊரைவிட்டுப் போகிறாள்.
பசுபதி கோவில் கோபுர வாயிலை வண்டி அடைந்த போது உள்ளே கொடிக் கம்பத்தைத் தாண்டி இருக்கும் மூலஸ்தானம் தெரிந்தது. பவானி கையெடுத்து வணங்கினாள்.
பாலுவும் கோவிலை அரைகுறையாகப் பார்த்துக் கொண்டே கன்னத்தில் போட்டுக் கொண்டான். அவன் பார்வை தெருக் கோடியில் வரும் மூர்த்தியின் மேல் இருந்தது.
”அம்மா! அதோ மூர்த்தி மாமா வரார்" என்றான் உற்சாகம் பொங்க.
"வரட்டும்" என்றாள் பவானி அமைதியாக. சைக்கிளில் வேகமாக வந்த மூர்த்தி வண்டியை நெருங்கியதும் வேகத்தைக் குறைத்துக் கொண்டு 'மதராஸ் போகிறீர்களாமே........ டிக்கெட் வாங்கிக் கொடுத்து ரயில் ஏற்றிவிட்டு வரச் சொல்லி மாமா அனுப்பினார்" என்றான்.
”எதற்கு உங்களுக்கு வீண் சிரமம்?" என்று கூறிய பவானி அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டு விட்டாள்.
ரயிலடியை அடையும்போது மணி பத்தாகி விட்டது . "வண்டி பன்னிரண்டரைக்குத்தான் வரும்" என்று ஸ்டேஷன் மாஸ்டர் அறிவித்தார். சாமான்களை யெல்லாம் ஒரு பக்கமாக வைத்து விட்டு எல்லோரும் பெஞ்சியில் உட்கார்ந்தார்கள்.