'டிக்கெட்தான் வாங்கியாகி விட்டதே நீங்கள் போங்கள்' என்று மூர்த்தியிடம் சொல்லப் பவானிக்குத் தைரியமில்லை.
"பாலு நீ இனிமேல் அங்கேதானே படிக்கப் போகிறாய்?" என்று பேச்சை ஆரம்பித்தான் மூர்த்தி.
”ஆமாம்! மாமா... எங்க மாமாவுக்கு கார் இருக்கிறது. மாமா பெண் சுமதிக்கு ரிக்ஷா இருக்கிறது. எதில் வேண்டுமானாலும் பள்ளிக்கூடம் போகலாம்" என்றான் பாலு பெருமை தொனிக்க.
”பேசாமல் இருடா நீயும் உன் பெருமையும்!" என்று அதட்டினாள் பவானி.
”சொல்லட்டும். அவனை அதட்டாதீர்கள்" என்றான் மூர்த்தி புன்முறுவலுடன். பிறகு எதையோ நினைத்துக் கொண்டவனாக. அந்தக் கிழவர் சீர்திருத்தவாதிகளைப் பற்றிக் கேலி பண்ணினாரே. இவரை யார் பேசச் சொல்லிக் கூப்பிட்டார்கள்?" என்று பழைய கதையைக் கிளப்பினான்.
"அவருடைய அபிப்பிராயம் அவ்விதம் இருந்தது. அதைச் சரியென்று எல்லோரும் ஆமோதிக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லையே!" என்றாள் பவானி.
”இன்று நீங்கள் ரயிலுக்குக் கிளம்பிய பிறகு என்னைப் பார்த்து விட்டு மறுபடியும் எங்கள் வீட்டுக்கு வந்தார். தன் பேத்தியின் ஜாதகத்தைக் கொடுத்து விட்டு. மாமாவிடம் என் ஜாதகத்தைக் கேட்டார். அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?" என்று கேட்டான் மூர்த்தி.
" என்ன நடந்தது?" என்று தன் அகன்ற விழிகளை கல விழித்துக் கேட்டாள் பவானி.
”ஒன்றும் அசம்பாவிதமாக நடக்கவில்லை. பயந்து விடாதீர்கள். மாமா என்னைக் கூப்பிட்டு என் ஜாதகத்தைக் கேட்டார்”.
”ஜாதகத்தை எடுத்து வந்து அவர்கள் எதிரிலேயே கிழித்துப் போட்டேன்! எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நான் சீர்திருத்தவாதி. சீர்திருத்தமணம் செய்து கொள்ளப் போகிறேன்" என்றேன்.