”பார்த்தாயாடா கல்யாணம்?" என்று ஆரம்பித்தார் கிழவர்.
”பார்க்கிறது என்ன சார். பார்க்கத்தான் போகி றீர்கள். ஜாதி விட்டுக் கலியாணம் பண்ணிக் கொள்கிறது ஒருவிதமான சீர்திருத்தம். நம் நாட்டிலே வாடும் ஆயிரக் கணக்கான விதவைகளை மறுமணம் செய்து கொண்டு வாழவைப்பதும் ஒரு சீர்திருத்தம்தான். நான் ஒரு விதவையை மறுமணம் செய்து கொண்டாலும் நீங்கள் ஆச்சரியம் அடைய வேண்டாம் என்றேன்" என்று கூறி முடித்தான் மூர்த்தி.
ரயிலடி நிசப்தமாக இருந்தது. அங்கே அன்று கூட்டமே இல்லை. பவானி பற்களைக் கடித்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள். பாழும் ரயில் சீக்கிரம் வராதா என்று வேதனைப் பட்டாள். இந்த அதிகப் பிரசங்கியின் பேச்சிலிருந்து விடுபட்டு எப்பொழுது ரயில் ஏறுவோம் என்று ஆத்திரப்பட்டாள். வாழ்க்கையில் நேர்மையைப் பற்றி அறியாதவர்கள் முதலில் தன் வாழ்க்கையைச் சீர்திருத்தம் பண்ணிக் கொண்டல்லவா சமூகத் தொண்டு என்கிற புனிதமான சீர்திருத்தத்தில் இறங்க வேண்டும்? சே! இவனைப் போய் ரயிலடிக்கு அனுப்பினாரே கல்யாணம் மாமா என்று வேதனை பொங்க பொழுது ஒரு பாரமாய் உட்கார்ந்திருந்தாள் பவானி.
அவுட்டரில் கை காட்டி இறங்கியது. புஸ் புஸ் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே வண்டி வந்து நின் மது. சாமான்களை ஏற்றி விட்டுப் பாலுவுடன் பவானி பெட்டியில் ஏறிக் கொண்டாள்.
வண்டிக்குள் கூட்டம் அதிகமில்லை. ஜன்னல் ஓரத் தில் ஒரு பெண் மூன்று குழந்தைகளுடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள். இன்னும் சில பேர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
”பாலு! போய்விட்டு வருகிறாயா?" என்று கேட்டான் மூர்த்தி.
"நான் வருகிறேன். உங்கள் மாமாவிடமும் மாமியிடமும் சொல்லுங்கள்" என்றாள் பவானி, வெறுப்பை எல்லாம் அடக்கிக் கொண்டு.
”சென்னையில் உங்கள் விலாசம்?"