பயணிகளுக்கிடையில் அதில் ஏறுவதற்கு ஏகப் போட்டி இருக்கும். எனவே தம்பி விசுவைத் தாங்கள் வந்த பாதையிலேயே திரும்பிப் போகச் சொல்லிச் சாலையில் ஒரு வளைவுக்கு அப்பால் அந்த வண்டியைப் பிடித்து முன்பணமும் கொடுத்து அதில் ஏறிவரச் சொல்லலாம் என்பதுதான் கமலாவின் யோசனை. அந்த வண்டி போய்ச் சேர்கிற கிராமம் அல்லது நகரத்தில் இரவுப் பொழுதைக் கழித்து விட்டால் பிறகு மறுநாள் பயணத்தைத் தொடர வேறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
கமலா திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. கட்டை வண்டிப் பயணம் வசதிக் குறைவாக இருந்தாலும் விசுவுக்கும் கமலாவுக்கும் புதிய அனுபவமாக, உற்சாகமளிப்பதா யிருந்தது. மாலை நேரத்துச் சூரியன் செக்கச் சிவந்த பந்தாகச் சுற்றிலும் மஞ்சள் நிற ஒளி வட்டத்துடன் தகதகக்கும் அழகைக் கமலா ரசித்தாள். இருபுறமும் வயல்களில் நடவு முடிந்து சிறிது காலமே ஆகியிருந்ததால் இளம் பச்சை நிறப் பயிர் பூங்காற்றில் அலைஅலையாக அசைவது மனோரம்மியமான காட்சியாக விளங்கியது. ஆங்காங்கே மூன்று நான்கு வெண் நாரைகள் ஜிவ்வென்று சேர்ந்தாற் போல் பறந்து வந்து ஒய்யார அழகுடன் வயல்களில் இறங்கின
"டைவ் பாம்பர் மாதிரி இறங்குகிறது பார்த்தியாடா" என்றார் கமலா தம்பி விசுவிடம். அவன் அவளை லட்சியம் பண்ணாமல் வண்டிக்காரனிடம், "நான் கொஞ்ச தூரம் ஓட்டி வருகிறேனே" என்று கயிற்றைப் பிடித்துக் கொள்ள அனுமதி கோரி கெஞ்சிக் கொண்டிருந்தான்.
மகிழ்ச்சிக் கிளுகிளுப்பெல்லாம் ராம பட்டணம் எல்லையை நெருங்கியதும் முடிந்து போயிற்று. துரதிருஷ்டவசமாக வண்டி மாடுகளில் ஒன்று படுத்துக் கொண்டு விட்டது. வண்டிக்காரன் மாட்டை எழுப்பப் பார்த்தான். முடியவில்லை.
"சாமி! மாடு இனிமேல் நடக்காது! அதோ இருக்கிறது ஊர். கூப்பிடு தூரம் தான். வாடகையை முழுசாகக் கொடுத்து விட்டு, இறங்கிப் போங்க" என்றான்.
"இறங்கி நடப்பது பெரிய காரியம் இல்லையப்பா. இத்தனை சாமான்களையும் எப்படிச் சுமப்பது?" என்றார் மாசிலாமணி. "இங்கே ஜாகை வசதியெல்லாம் எப்படி? சத்திரம் சாவடி, ஓட்டல் கீட்டல் ஏதாவது உண்டா?"
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஊருக்கு வரணும்னு சொன்னீங்க. ஏத்திக் கிட்டு வந்தேன்.