கொடுத்து விட்டது.
'அடேயப்பா! இந்த முகம்தான் எத்தனை களையானது! இந்த விழிகள்தாம் எவ்வளவு வசீகரமானவை! இவள் வழக்காடவே வேண்டாம். கோர்ட்டுக்குள் வந்து நின்று கண்களைச் சுழற்றி நாலு புறமும் ஒரு பார்வை பார்த்தால் போதும். கேஸ் ஜெயம்தான்!" என்று எண்ணினாள் கமலா.
'ஆனால் அப்படிப்பட்ட வெற்றியை விரும்புகிறவளாகவும் இவள் தோன்றவில்லை. அறிவுக் களையும் இந்த முகத்தில் விகசிக்கிறது. இந்தக் கண்களின் பிரகாசமும் ஒளிரும் நெற்றியும் தேர்ந்த ஞானத்தின் விளைவுகள்.'
இவ்வாறு முடிவு கட்டிய கணத்தில் தான் எப்படியெல்லாம் சுதந்திரமாக இருக்க வேண்டும். சாதனைகள் புரிய வேண்டும் என்று விரும்பினாளோ அப்படியெல்லாமும் அதற்கு மேலும் தன் எதிரே நிற்கும் இந்தப் பெண் விளங்குகிறாள் என்று கமலாவுக்கு நிதர்சன மாகப் புரிந்தது. அதனால் மகிழ்ச்சியும் பொறாமையும் ஒரே சமயத்தில் தன் நெஞ்சை நிரப்புவதை அவள் உணர்ந்தாள். அந்தப் பெண்ணுடன் இன்னும் நெருங்கிப் பழகி, நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. கூடவே, 'இவளுடன் என்ன பேச்சு' என்று மனம் வினவியது.
"அம்மா, என் பெயர், 'ஏண்டி பெண்ணே'யில்லை. பவானி. இந்த ஊரில் இராத் தங்க இடம் வேண்டுமென்றால் ஹோம்ரூல் கோபால கிருஷ்ணன் வீட்டுக்குப் போங்கள்" என்றாள் அந்தப் பெண்.
"ரொம்பப் பரோபகாரியோ?"
"அவர் பராபகாரியோ என்னமோ, அவர் மகன் கல்யாணசுந்தரம் ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்லவர். பிறருக்கு உதவவென்றே பிறந்தவர். நிச்சயம் உங்களுக்கு இடம் தேடிக் கொடுப்பார்" என்ற பவானி கமலாவைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.
அந்தப் புன்னகை நட்பின் அறிகுறியாகவும் தோன்றியது. ஏளனமாகவும் பட்டது கமலாவுக்கு.
தொடரும்...