இருக்கிறது தெரியுமோ?" என்று கேட்டார்.
"தெரியாதே" என்றான் கல்யாணம்.
"அப்பா! மாற்றிச் சொல்லி விட்டீர்கள், 'கல்யாண சுந்தரத்தின் அப்பா கோபால கிருஷ்ணன் வீடு' என்று விசாரியுங்கள்" என்றாள் கமலா.
கல்யாணம் கமலாவைப் பார்த்தான். அவள் தன் தாயாருக்குப் பின்னால் மறைந்தும் மறையாமலும் நின்று கொண்டிருந்தாள். ஆனால் அவளுடைய அழகிய, பெரிய, கரிய நயனங்கள் அவனுடைய சுந்தரமான முகத்தை வட்டமிடத் தவறவில்லை.
கல்யாணசுந்தரம் அந்தப் பார்வையில் சில விநாடிகள் கட்டுண்டவனாக நின்றான். பிறகு, "எதற்காகக் கேட்கிறீர்கள்?" என்றான்.
"மதராஸிலிருந்து வருகிறோம். இந்த ஊரில் முன் பின் யாரையும் தெரியாது. அவரும் அவர் மகனும் ரொம்பப் பரோபகாரிகள் என்று கேள்விப்பட்டோம். அவர் வீட்டிலே இன்று இரவு தங்கிவிட்டு..."
"அவர் வீட்டிலே ஏற்கனவே நாலு குடும்பங்கள் வந்து தங்கியுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரி ஆறு பேர். வக்கீல் கோபாலகிருஷ்ணன் தம்முடைய கேஸ் கட்டுக்களை வைக்கக் கூட இடமில்லாமல் திண்டாடுகிறார்."
இதற்குள் காமாட்சி அம்மாள் ஓர் அடி முன்னால் வந்து, "ஏண்டாப்பா நீ யாரு?" என்றாள்.
"நான் தான் ஹோம்ருல் கோபாலகிருஷ்ணன் மகன் கல்யாண சுந்தரம்."
"நினைச்சேன். முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது."