"என்ன தெரிந்தது?"
"நல்ல பிள்ளை, உபகாரி என்று தெரிந்தது. என்னமோ அப்பா நீதான் கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கணும். வயசுப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டோம். இன்று இராத்திரி தங்க இடம் பார்த்துக் கொடுத்தாலும் போதும்."
காமாட்சி அம்மாளுக்குப் பின்னால் மறைவாக நிற்பது போல் பாவனை செய்தபடி அதன் மூலமே தன்பால் கவனத்தை ஈர்த்த கமலாவை இரண்டாவது தடவையாகப் பார்த்தான், கல்யாணம். கொஞ்சம் யோசித்தான்.
"இந்த ஊரிலே இப்போது வேறு எது கிடைத்தாலும் கிடைக்கும். தங்க இடம்தான் கிடைக்காது. மதராஸ்காரர்களில் பாதிப் பேர் இந்தச் சின்னப் பட்டணத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்."
"அப்படிச் சொல்லக் கூடாது அப்பா! நீதான் ஏதாவது ஏற்பாடு செய்தாக வேண்டும்."
"ஆகட்டும் பார்க்கிறேன். எனக்குத் தெரிந்த சிநேகிதர் ஒருவர் வீடு காலியாக இருக்கிறது. வடக்கு வீதியிலே தேரடி சமீபமாக வந்து சேருங்கள். அங்கே சந்திக்கிறேன்" என்று கூறிய கல்யாணம் காரை நோக்கி நடந்தான்.
"பவானி அக்கா சொன்னது சரியாகத்தான் இருக்கு. ரொம்பப் பரோபகாரிதான்" என்றாள் கமலா.
"என்னது! பவானி சொன்னாளா?" சட்டென்று திரும்பிக் கமலாவைப் பார்த்துக் கேட்டான் கல்யாணம்.
கமலா திடுதிப்பென்று அவன் நேருக்கு நேர் தன்னிடம் பேசவே பதறியவளாகத் தாயாரின் பின்னால் மறைந்து கொண்டாள்.