"ஆமாம், அந்தப் பெண் பவானிதான் சொன்னாள். அதனால்தான் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிய வந்தது" என்றார் மாசிலாமணி.
"ஏன் ஸார்! அதை முன்னாலேயே சொல்லக் கூடாது! வாங்க, வாங்க! வந்து காரிலே ஏறுங்க" என்று உபசாரம் செய்தான் கல்யாணம்.
"நடந்தே போயிடலாமே, அம்மா. எதுக்காக அவருக்குச் சிரமம்?" என்றாள் கமலா. பவானியின் பெயரைக் கேட்டதுமே கல்யாணத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றத்தை அவளால் ரசிக்க முடியவில்லை.
"பேசாமே அந்த கறுவடக டின்னைத் தூக்கிக் கொண்டு வா, கமலா! இருட்டிக் கொண்டு வருகிறது பார்" என்று உத்தர விட்டாள் காமாட்சி.
ஆளுக்கொரு பொருளாகச் சுமந்து கொண்டு போய்க் கார் டிக்கியிலும் கூரைக் காரியர் மேலும் ஏற்றினார்கள். காருக்குள் அமர்ந்து கொண்டார்கள்.
வண்டிக்காரன் இதற்குள் மாட்டை அவிழ்த்து வண்டியை நகர்த்திச் சாலையோரம் விட்டிருந்தான்.
கல்யாணசுந்தரம் டிரைவர் ஆசனத்தில் அமரக் கதவைத் திறக்கப் போனபோது, அவன், "சாமி சாமி! வாடகை!" என்று கத்தினான்.
கல்யாணசுந்தரம் ஐந்து ரூபாய் நோட்டை அலட்சியமாய் எடுத்துக் கொடுத்துப் "போ" என்றான்.
காருக்குள்ளிருந்தபடி இதைப் பார்த்த காமாட்சி அம்மாள், "இது என்ன இந்தப் பிள்ளை இப்படி ஊதாரிச் செலவு பண்ணுகிறானே" என்று கமலாவிடம் கிசுகிசுத்தாள்.