அமர்ந்து கொண்டாள். கார் கிளம்பி வாசல்கேட்டை நோக்கிச் சென்ற போது மாஜிஸ்திரேட் இன்னும் அதே இடத்தில் அதே நாற்காலியில் அமர்ந்திருக்கக் கண்டாள் பவானி. காரிலிருந்தபடியே, "வருகிறேன் ஸார்! குட் நைட்" என்று கூறி விடை பெற்றாள். கோவர்த்தனன் கரம் அசைத்தாரேயொழிய அவ்விருவரும் சேர்ந்து போவதைப் பார்க்க அவர் மனம் எரிமலையாகக் கொந்தளித்தது.
இந்தப் பயணத்துக்குச் சீக்கிரம் முடிவு ஏற்பட வேண்டாம் என்று கருதியவனாகக் கல்யாணம் மெல்ல காரை ஓட்டினான். மாசிலாமணி குடும்பத்தைச் சந்தித்துக் குடிவைத்த விவரங்களையெல்லாம் சாங்கோ பாங்கமாகக் கூறினான்.
அவனுடைய பிறருக்கு உதவுகிற குணத்தைப் போற்றிய பவானி, "இந்த நாடகத்தைக்கூட ஏழை எளியோருக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நடத்தப் போகிறீர்களாமே? என்று அரங்கேறுகிறது? தேதி நிச்சயமாகி விட்டதா?" என்று கேட்டாள்.
"தேதி என்னமோ நிச்சயித்து விட்டோம். ஆனால் கதாநாயகி வேஷத்துக்குத்தான் ஆள் இல்லை. ஆண் பிள்ளையைப் பெண் வேஷம் போட்டுக் கொள்ளச் சொல்வது முட்டாள்தனம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதில் 'ரியாலிடி' கொஞ்சமும் இருப்பதில்லை. உருக்கமாக அமைய வேண்டிய காட்சிகூட நகைச்சுவையாகி விடுகிறது. கதாநாயகி வேஷம் ஏற்க யாராவது ஒரு பெண்மணி முன்வந்தால் நாடகம் 'ஸக்ஸஸ்'; இல்லையேல் 'ஃபெய்லியர்'!"
"மேடை ஏறி நடிக்க இந்த ஊரில் எந்தப் பெண் முன்வருவாள்? வீண் ஆசை" என்றாள் பவானி.
"அதனால்தான் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாயிராமல் பெரிய நகரத்திலிருந்து வந்தவர்களாகப் பிடித்துப் போடலாம் என்று யோசனை பண்ணுகிறேன். சென்னையிலிருந்து வந்திருக்கிறார்களே என்பதால் உடனே இல்லா