விட்டாலும் இரண்டு நாட்கள் கழித்துக் கேட்டுப் பார்க்க உத்தேசம். அந்தப் பெண் கமலாவும் பார்க்கச் சுமாராக இருக்கிறாள். மேடை ஏறி நடிக்கச் சம்மதிப்பாள் என்று தோன்றுகிறதா உங்களுக்கு?"
"சிவசிவா! அவள் பெண் ஜன்மமாகிய என் முன்னால் நின்றே இரண்டு வார்த்தை பேச வில்லையே. அம்மாவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். அவளாவது, மேடை ஏறி நடிக்கவாவது?"
இந்தப் பதிலையே பவானி கூற வேண்டும் என்று எதிர்பார்த்த கல்யாணம் திருப்தி அடைந்தவனாக, "அப்படியானால் ஒன்று செய்யுங்கள்; நீங்களே கதாநாயகி பாகத்தை ஏற்று நடித்து விடுங்கள்" என்றான்.
"அதற்கென்ன? செய்து விட்டால் போகிறது!" என்றாள் பவானி.
இவ்வளவு சுலபமாக அவள் சம்மதித்து விடுவாள் என்று எதிர்பாராத கல்யாணம் திடுக்கிட்டதால் கார் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. பவானி பதற்றமடைந்து "ஸ்டெடி, ஸ்டெடி" என்று எச்சரித்தபடியே ஸ்டியரிங்கைப் பற்றக் கரத்தை நீட்டினாள். அவள் சாய்ந்த போது அவள் தோள்கள் கல்யாணத்தின் தோள்களை உரசின. அவளுடைய நீண்ட அழகிய விரல்கள் கல்யாணத்தின் விரல்களைத் தீண்டியதில் அவற்றின் மிருதுத் தன்மையை அவன் உணர்ந்தான்.
அவ்வளவுதான்! கல்யாணத்தின் உடம்பெல்லாம் சிலிர்த்து நெளிந்தது. ஸ்டியரிங்கைப் பற்றியிருந்த அவன் கரங்கள் மட்டும் நிதானத்துடன் இருக்குமா என்ன?
கார் பாம்புப் பாதை வகுத்து பிறகு அதிலிருந்து பிரிந்து போய்ச் சாலையோரக் குப்பைத் தொட்டி ஒன்றின் மீது 'ணங்' என்று மோதிக் கொண்டு நின்றது.
"ஐயோ!" என்று அலறியபடியே கரங்களில் முகம் புதைத்துக் குனிந்து கொண்டாள் பவானி.