நல்ல வேடிக்கை" என்றார்.
"ஆமாம், சென்னையிலேயே இருப்பவர்கள் மகாபலிபுரம் போயிருக்க மாட்டார்கள்; ஏன், லைட் ஹவுஸ்கூட ஏறியிருக்க மாட்டார்கள்" என்றான் கல்யாணம்.
"நான் அப்படியில்லை; எல்லா இடங்களையும் பார்க்க ஆசைப்படுவேன். சந்தர்ப்பம் கிடைக்கா விட்டால் ஏற்படுத்திக் கொள்ளவாவது செய்வேன்" என்றாள் பவானி.
இந்தப் பயணத்தைக்கூட மேற்கொள்ள அவள் தானாகவேதான் முயற்சி எடுத்துக் கொண்டாள். மாஜிஸ்திரேட் கோவர்த்தனன், 'ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணனுக்கு ஏலமலையில் எஸ்டேட் உண்டு. அங்கிருந்து சில குண்டர்களை அனுப்பி என்னைத் தாக்கப் போவதாகக் கல்யாணம் மிரட்டினான்' என்று சொன்னதிலிருந்து இங்கே மலை ஏறிப் பார்த்துவிட அவள் ஆவலா யிருந்தாள். அதோடு மாஜிஸ்திரேட்டின் குற்றச்சாட்டைச் சற்று ஆராய்ந்து பார்த்து வரும் எண்ணமும் ஏற்பட்டிருந்தது.
எனவே இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு சமயம் கல்யாணம் வழக்கம்போல் அவளுக்குத் தன் காரில் லிஃப்ட் தருவதாகக் கூறியபோது, அவள் இனியும் ஆவலை அடக்க முடியாதவளாக, "நான் உங்கள் காரில் இன்று முதல் ஏறப் போவதில்லை; உங்கள் மேல் எனக்குக் கோபம்" என்று பேச்சை ஆரம்பித்தாள்.
"அடடா! நான் என்ன தப்பு பண்ணி விட்டேன்?" என்றான் கல்யாணம்.
"உங்களுக்கு இங்கே ஏலமலையில் எஸ்டேட் இருப்பதாக என்னிடம் சொல்லவே இல்லையே?" என்றாள் பவானி.
"சொல்லிக் கொண்டிருப்பார்களா? அழைத்துப் போக வேண்டும். கோடை விடுமுறையில் ஒரு மாதம், இரண்டு மாதம் என்று எங்கள் குடும்பம் அங்கே போய்த் தங்குவதுண்டு. ஆனால் இந்தத் தடவை அப்பா அம்மாவை மட்டும் அனுப்பி விட்டு நான் இங்கேயே இருக்கத் தீர்மானித்துவிட்டேன்."
"ஏன்? நாடக ஒத்திகை, சமூக சேவை எல்லாம் தடைப்படுமே என்றா?"