"அப்பா, இப்போதெல்லாம் கேஸ்களை ரொம்பக் குறைத்துக் கொண்டுவிட்டார். எஸ்டேட் விவகாரம் எல்லாம் கூட என் தலையில் கட்டிவிட்டார். மாசத்தில் இரண்டு மூன்று தடவையாவது மலை ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்து விடலாம். அடுத்த முறை நான் போகும்போது நீங்களும் வரலாமே?"
"ஆகட்டும், மாமாவைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்" என்றாள் பவானி.
"அவரையும் அழைத்து வாருங்கள். அவருக்கும் ஒரு மாறுதல் வேண்டாமா?"
இந்த உரையாடலின் விளைவுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை நாடக ஒத்திகையை ஒத்திப் போட்டுவிட்டு அவர்கள் கிளம்பி யிருந்தார்கள். கல்யாணம் ஒரே குஷியான மனநிலையில் இருந்தான். ஆனால் அவன் காருக்கு அது பிடிக்கவில்லை. அவன் கவனம் முழுவதும் தன்னிடமே திருப்பப்பட வேண்டும்; பவானிக்கு அதில் பங்கு சேரக் கூடாது என்று கருதியது போல் அது 'மக்கர்' செய்து நின்று விட்டது. காரின் முன்புறமிருந்து குபுகுபு என்று ஆவி அடித்தது.
"பார்த்தீர்களா? இதற்குத்தான் நான் புதுக் கார் வாங்குகிறேன் என்றேன். பாதி தூரமாவது வந்திருப்போமா?"
"முக்கால் திட்டத்துக்கு மேலேயே வந்தாகிவிட்டது. இங்கேயே இருங்கள். ஐந்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன்" என்ற கல்யாணம் தொலைவில் தெரிந்த சில பண்ணை யாட்களின் குடிசைகளை நோக்கி நடந்தான் தண்ணீர் பெற்று வர.
பவானி காரைவிட்டு இறங்கினாள். காலாற நடந்தாள். அவள் கரத்தில் ஒரு பைனாகுலர் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு மரத்தின் நிழலில் சாலை ஓரமாக நின்று பைனாகுலர் வழியே சுற்று வட்டாரத்தை நோட்டம் விட்டாள்.
"ரொம்ப ஓரமாகப் போகாதே அம்மா! கிடுகிடு பள்ளம்!" என்று காரினுள்ளேயிருந்து மாமா குணசேகரன் குரல் கொடுத்தார்.