ஒத்திகையெல்லாம் தாமதமாகிறதே, அதை எண்ணித்தான் கவலைப் பட்டேன்" என்று சமாளித்தான்.
பவானிக்குப் பாவமாக இருந்தது. ஆறுதலாகப் பேசினாள். "பாதகமில்லை, நீங்கள் இல்லாவிட்டாலும் இருப்பதாகவே பாவித்து ஒத்திகைகளைச் சரியாக நடத்துகிறோம். அரங்கேற்றம் குறித்த நாளில் ஜாம் ஜாம் என்று நடக்கும். ஒரு குறையும் வராது."
"சரி. அப்போ நான் போய் வரட்டுமா? உம்... வருகிறேன்....சீக்கிரம் திரும்பிவிடுகிறேன்..... வரட்டுமா?" தயங்கித் தயங்கி நின்றான் கல்யாணம். லேசில் கிளம்ப மாட்டான் போலிருந்தது.
"சென்று வாருங்கள்! வென்று திரும்புங்கள். வெற்றித் திலகமாக நெற்றித் திலகமிட்டு அனுப்பி வைக்கட்டுமா?" என்றாள் பவானி நாடக பாணியில். டயலாக் குக்கு ஏற்ப நடிக்கவும் செய்தாள் வேடிக்கையாக.
கல்யாணத்துக்குச் சற்று முன் ஏற்பட்ட தாபம் தீர்ந்து உச்சி குளிர்ந்து விட்டது. "சாமானிய கேஸ் இல்லை இது. பெறப் போவது மாபெரும் வெற்றி. உங்கள் வாழ்த்து என் நெஞ்சுடன் இருக்குமாதலால் நான் வெல்வதும் உறுதி" என்று உற்சாகமாகக் கூறிச் சென்றான்.
அதையெல்லாம் இப்போது நினைத்துச் சிரித்துக் கொண்டாள் பவானி. 'கல்யாணம்தான் ஊரில் இல்லை. அவர் அப்பாவையாவது பார்த்து வைத்தால் என்ன?' என்று அவளுக்குத் திடும்மென்று தோன்றியது. 'அவர் வீட்டுக்கு இதுவரையில் போனதே இல்லையே நான். இந்த ஊருக்கே பெரிய மனிதர்; பிரசித்தி பெற்ற வழக்கறிஞர். மரியாதைக்காகவாவது ஒரு தடவை போய்ப் பார்க்க வேண்டாமா? ஏலமலைக்கு இன்னொரு சமயம் போய்க் கொண்டால் போகிறது. இருள் கவிகிற நேரத்தில் மலை ஏறுவதை விடப் பகல் போதில் செல்வது நல்லது. தக்க துணையுடன் போவதும் உசிதம்தான். கோர்ட் விடுமுறை நாளில் மாமாவையும் அழைத்துக்கொண்டு போகலாம். இப்போது ஹோம்ரூல் கோபாலகிருஷ்ண முதலியாருக்கு நமது மரியாதைகளைச் சமர்ப்பித்து விட்டு வருவோம்.'
எண்ணத்தை உடனே செயலாக்கத் துணிந்து கிளம்பினாள் பவானி. புது கார் பாங்காக ஓடியது. உள்ளத்தைக் குடைந்து கொண்டிருந்த கவலைகலை மீறி ஓர் உற்சாகம் பிறந்தது அவளுக்கு.