"போதும் பரிகாசம்! கல்யாணம் என்றைக்குத் திரும்பி வருகிறான் என்று கேட்கத்தான் வந்தேன். இனிமேல் இந்த வீட்டில் ஒரு நிமிஷம் கூட என்னால் இருக்க முடியாது. வந்திருக்கிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல என்னால் முடியவில்லை. உங்கள் பிள்ளைக்கு ஒரு கல்யாணத்தையாவது இதற்குள் பண்ணி வைத்திருந்தால்..."
"வைத்திருந்தால் என்ன? மாமியாரும் மருமகளும் ஓயாமல் சண்டை போட்டுக் கொண்டிருப்பீர்கள். உங்கள் கேஸிலே வாதாடறதுக்குத்தான் அப்பா பிள்ளை இரண்டு பேருக்கும் பொழுது சரியாக இருக்கும்."
"இப்போ மாத்திரம் புரட்டி விடுகிறீர்களாக்கும்? பொழுது விடிந்துஒரு கட்சிக்காரனைக் கூடக் காணோம்."
"நீயே போய் ஊரெல்லாம் சொல்லி விட்டு வருவாய் போலிருக்கே? என்றாவது ஒரு நாள் இப்படித்தான் இருக்கும்."
இத்தருணத்தில் வாசலில் ஹாரன் சத்தமும் தொடர்ந்து கார் என்ஜின் ஒரு முறை உறுமிவிட்டு ஓயும் சத்தமும் கேட்டது.
"பார்த்தாயா? நீ சொல்லி வாய் மூடுவதற்குள் கட்சிக்காரர் யாரோ வருகிறார்!"
வாசலிலிருந்து "ஸார்!" என்று குரல் கேட்டது.
"நீ உள்ளே போ சீக்கிரம்" என்றார் ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன். "காரிலே யாரோ பெரிய மனிதர்கள் வந்து இறங்கியிருக்கிறார்கள்"
"எதற்கு இப்படி விரட்டறேள்? பெண் பிள்ளைக் குரல் மாதிரி இருக்கே!"
"இருக்கட்டுமே! அதனால் என்ன? பெண்ணுக்கு வக்கீலை நாட வேண்டிய பிரமேயமே இருக்காதா? இடத்தைக் காலி பண்ணு. சீக்கிரம். உம்!"