ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் தம் ஆபீஸ் அறையில் உட்கார்ந்து கேஸ் கட்டுக்களைப் படித்துக் கொண்டிருந்தார். சற்று நேரம் உன்னிப்பாகப் படித்த பிறகு அந்தத் தாள்களை முன்னும் பின்னுமாகப் புரட்டி நோட்டம் விட்டபடியே தமக்குத் தாமே பேசிக் கொள்ளவும் ஆரம்பித்தார்.
"சட்டம் ஒரு கழுதை என்று சொல்கிறது சரியாகத்தான் இருக்கிறது. கீழ்க் கோர்ட்டு தீர்ப்பு இரண்டு வருடக் கடுங்காவல். அப்பீல் கோர்ட்டிலே தீர்ப்பு குற்றமே ருசுவாக வில்லை; கேஸ் டிஸ்மிஸ்! ஹைகோர்ட்டிலே தீர்ப்பு மறுபடியும் அடியிலிருந்து விசாரணை நடத்தணும்! எப்படி இருக்கிறது. கதை? சட்டத்தைக் கழுதை என்று சொல்வதிலே என்ன தப்பு?..."
இத்தருணத்தில் காலடி ஓசை கேட்கவே நிமிர்ந்த கோபாலகிருஷ்ணன், "அடேடே! நீயா, பூஜை வேளையிலே கரடி நுழைந்த மாதிரி...." என்றார்.
அவர் மனைவி அழைக்குள் முன்னேறியவாறே, "ஆமாம், கழுதை, கரடி, குரங்கு இன்னும் என்னென்ன சொல்லணுமோ சொல்லுங்கள்....." என்றாள்.
"அடேடே உன்னைச் சொல்லலேடி பழ மொழியைச் சொன்னேன்.....இருக்கட்டும். இப்போ நீ எதற்காக வந்தே? நான்தான் ரொம்ப வேலையாக இருக்கேன்னு தெரியுமே? உன் பிள்ளையானால் டிராமா, காலட்சேபம்னு போயிடறான். ஒரு நிமிஷம் வீட்டிலே இருந்து உதவ மாட்டேன் என்கிறான். அவனை ஹைகோர்ட் கேஸ் விஷயமாக மெட்ராஸுக்கு அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. ஆயிரம் சால்ஜாப்பு சொன்னான். எனக்கு மெட்ராஸுக்கும் ராமப்பட்டணத்துக்குமாக அலைய முடிகிறதா சொல்லு. ஏதுடா அப்பாவுக்கு வயதாகி விட்டதே. நாம் கொஞ்சம் கேஸ்களைப் பார்த்து உதவி பண்ணுவோம் என்ற எண்ணம் துளிக்கூட இல்லை."
"உங்களுக்கு என்ன அப்படி வயதாகி விட்டது?" என்றாள் செல்லம்.
"போன வருஷம் ஐம்பது; இந்த வருஷம் நாற்பத்தொன்பது அவ்வளவுதான். உன் இளமைத் தோற்றத்துக்கு ஏற்ப நான் வருஷா வருஷம் வயசைக் குறைச்சுண்டுதானே வரணும்?"