"தெரியுமே! என்னிடம் சொல்லிக் கொண்டு தான் கிளம்பினார். அவரைப் பார்க்க நான் வரவுமில்லை. உங்க ஆசிர்வாதத்தைக் கோரித்தான் வந்திருக்கேன். இந்தப் பக்கத்தில் லீடிங் லாயர் நீங்க. இந்த ஊருக்கு வந்ததிலிருந்து நான் உங்களைச் சந்தித்துப் பேசினதே இல்லை. மரியாதைக்காவது வந்து பார்க்கணும் என்று ரொம்ப நாட்களாய் எண்ணம். இன்று புதுக் காரும் வரவே...."
"எதற்காக என்னைப் போய்ப் பிரமாதமாகப் புகழ்கிறீர்கள்?" என்றார் கோபால கிருஷ்ணன். "ஊர் முழுதும் பவானி என்ற பெயரைக் கேட்டாலே 'ஓஹோஹோ' என்கிறார்கள். கோர்ட்டுக்கு நான் வரும் போது சில சமயம் உங்களைச் சுட்டிக் காட்டி இன்னாரென்று என்னிடம் சக வக்கீல்கள் சொல்லியிருக்கிறார்கள்."
"நல்ல வார்த்தைகளாகத்தானே ஸார் பேசினார்கள் என்னைப் பற்றி? குற்றம் குறை ஒன்றும் கூறவில்லையே?"
"கிராஸ் எக்ஸாமினேஷனைக் கிளாஸா நீங்க நடத்தறதாக் கேள்விப் பட்டேன். அப்படிப்பட்டவர் என்னைத் தேடி வருவதென்றால் அது என் பாக்கியம்தான்" என்றார் கோபாலகிருஷ்ணன்.
"விளையாட்டுக்குக்கூட இப்படி நீங்க உங்களையே குறைத்துப் பேசிக் கொள்ளக் கூடாது. அனாவசியமாக என்னைத் தூக்கி வைக்கவும் வேண்டியதில்லை. நான் இந்தத் தொழிலுக்குப் புதுசு. உங்களைப் போன்றவர்கள் என்னை 'கைட்' பண்ணனும். அடிக்கடி ஏதாவது சந்தேகங்கள் சட்டப் பாயிண்டிலே தோன்றும். நீங்க கிளியர் பண்ணனும். உங்கள் மகளைப் போல் நினைத்துக் கொள்ளுங்கள். என்ன சரிதானா?"
"அதற்கு என்ன ரொம்ப சரி!"
"இப்போ கூடப் பாருங்க. உங்க அட்வைஸ்ஸைக் கேட்டுக் கொண்டு போகலாம் என்று தான் வந்தேன். ஒரு விஷயமா."
"சொல்லுங்கள்."