"ஆமாம், ஸார்! ஜின்னாவை நினைச்சாலே ரொம்பப் பரிதாபமாகத்தான் இருக்கு" என்று சிரித்துக் கொண்டே கூறிய பவானி.
கோபாலகிருஷ்ணனை நோக்கி அடுத்த கேள்விக் கணையை வீசினாள்; "ஸார்! இன்னொன்று கேட்கிறேன். ஒரு நபரை உத்தமர் என்று நமக்கு மிக நன்றாக, உறுதியாகத் தெரியும். ஆனால் அவர் பெரிய குற்றம் புரிந்து விட்டதாக நிதர்சனமாகச் சாட்சியம் இருக்கிறது. அந்தச் சமயத்தில் ஒரு வக்கீலின் கடமை என்ன? சாட்சியத்தின்படி நடப்பதா? அல்லது மனச்சாட்சிப்படி நடப்பதா?"
ஹோம்ரூல் கோபாலகிருஷ்ணன் தலையைச் சொறிந்து கொண்டார். "நடந்ததை நடந்தபடி விவரித்தால் தேவலாம். இப்படி மர்மமாகக் கேட்டால் என்ன பதில் சொல்வது?"
"சரி, அது வேண்டாம். இதற்குப் பதில் கூறுங்கள். ஒரு மனுஷன் அவ்வளவாக நல்ல சுபாவம் உள்ளவன் இல்லை. அவனோடு பழக வேண்டாம் என்று அறிவு எச்சரிக்கிறது. ஆனால் மனம் அறிவுக்குக் கட்டுப் படாமல் எதனாலோ அவன்பால் ஈர்க்கப் படுகிறது. ஆனால் அதைக் காதல் என்றும் கூறுவதற்கில்லை. ஏதோ போன ஜன்மத்தில் விட்டுப்போன தொடர்பு இப்போது புதுப்பிக்கப்படுவது போல் ஒரு பிரமை. இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில் ஒரு பெண் எப்படி நடந்து கொள்வது?"
"'த்சொ. த்சொ த்சொ" என்று சத்தம் எழுப்பியபடி தலையை அசைத்தார் கோபால கிருஷ்ணன். "உனக்காக நான் ரொம்பப் பரிதாபப்படுகிறேன் பவானி!"
"ஏன் ஸார்? எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைக்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை. பைத்தியம் பிடிக்காமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் வந்து சற்று நேரம் பேசினேன். பெரிய கிரிமினல் லாயர் என்று பெயரெடுத்தவர் ஆயிற்றே. எனக்குத் தெளிவு பிறக்கிற மாதிரி ஏதாவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். கடைசியில் பார்த்தால் உங்கள் மூளையையும் குழப்பியதுதான் மிச்சம் என்று தோன்றுகிறது.
"உன்னை என் மகள் போல் நினைத்துக் கொள்ளச் சொன்னாய். சரி என்றேன். வார்த்தை மீற