(Reading time: 8 - 15 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

மாட்டேன். ஆனால் உனக்கு என்னைத் தகப்பனாக ஏற்கும் மனப் பக்குவம் இன்னும் வரவில்லை. அதனால்தான் குறிப்பிட்டுக் கூறாமல் குயுக்தியாகப் பேசுகிறாய். உனக்கு எப்பொது மனம் விட்டுப் பேசத் தோன்றுகிறதோ சொல்லு. கேட்கிறேன். என்னால் முடிந்த யோசனைகளைக் கூறி உதவிகளையும் செய்கிறேன். இதற்கு அதிகமாக நான் என்ன சொல்ல முடியும்?"

  

"அது போதும் ஸார் எனக்கு" என்ற பவானி எழுந்து விடை பெற்றுக்கொண்டாள். அவள் நன்றி கூறவில்லை. ஆனால் கலங்கி நீர் ததும்ப நின்ற கண்களை அவரிடமிருந்து மறைத்துக்கொள்ள அவள் பிரயாசைப் படாததே நன்றியை உணர்த்தியது.

  

பவானி சென்றதும் செல்லம்மாள் மறுபடியும் தன் கணவன் அறைக்குள் நுழைந்து, "என்னங்க, யாரோ ஒருத்தி வந்திருந்தாளே அவள் பெண்தானே?" என்றாள்.

  

"ஏன், அதிலே உனக்கு என்ன சந்தேகம்?"

  

"அந்தப் போடு போட்டாளே! பெண் என்றால் இப்படியா இருப்பார்கள்?"

  

"பின்னே எப்படி இருப்பாள்? அவளுக்கு என்ன குறை? அழகாய், இலட்சணமாய் நாகரிகமாய் இருக்கிறாள். படித்து பி.ஏ. பி. எல். பட்டமும் வாங்கி யிருக்கிறாள். எல்லோரும் உன்னைப்போல் கர்நாடகமாக இருக்கணுமா என்ன?"

  

"சரியாய்ப் போச்சு; நீங்க பேசறதைப் பார்த்தால் இந்த வீட்டிலேயே அவளைத் தங்கவைத்து விடுவீர்கள் போலிருக்கிறதே!"

  

"ஏன், அப்படிச் செய்தால் என்ன? அவள் கூட 'என்னை உங்கள் பெண்ணாகப் பாவித்துக் கொள்ளுங்கள்' என்றுதான் சொன்னாள். மருமகப் பெண்ணாகக்கூட ஏற்கலாம். ஆனால்....."

  

"போதும், வேறெ வினையே வேண்டாம். ஏற்கனவே இந்த வீட்டில் நீங்க அப்பா பிள்ளை இரண்டு பேர் வக்கீல் வேலை பார்த்து என்னைப் பேச விடாமல் அடிக்கிறீங்க. மருமகளும் வக்கீலாக வந்து விட்டால் நான் ஊமையாகி விடவேண்டியதுதான்."

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.