"கூரை எரிகிறதோ இல்லையோ என் வயிறு பற்றித் திகுதிகுவென்று எரிகிறது, கல்யாணம்! உன் பேச்சைக் கேட்டு இவர்களை இங்கே குடி வைத்தேன் பார்!"
"முதலியார் ஸார்! நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். இந்த மனுஷனுக்கு ஒரு வாரமாக உடம்பு சரியில்லை. வேலை கிடைத்தும் கூடப் போக முடியவில்லை. இந்தப் பெண்ணோ கிணற்றில் விழுந்து விட்டாள்."
"ஐயையோ! ஏன்! ஏன்?"
"உங்களால்தான்!"
"இது என்ன வீண் பழி? நான் இந்த வீட்டுக்கு வந்தே ரொம்ப நாளாயிற்றே.இரண்டு மாசத்துக்குப் பிறகு இன்றுதானே வருகிறேன். வாடகையைக் கொடுத்து அனுப்பி யிருந்தால் இப்போதுகூட வந்திருக்க மாட்டேனே!"
"அதுதான் நீங்கள் செய்த தவறு" என்றான் கல்யாணம். "ஏதடா, அயலூரிலிருந்து மனிதர்கள் வந்து நம் வீட்டில் தங்கியிருக்கிறார்களே, அடிக்கடி வந்து பார்த்துக் கவனித்துக் கொள்வோம் என்று தோன்றாதோ ஒரு மனுஷனுக்கு?"
"நீதான் கவனித்துக் கொள்கிறாயே என்று இருந்துவிட்டேன்." "அதன் விளைவைப் பாருங்கள். பாவம், இவள் கிணற்றில் விழ நேர்ந்தது!"
"அதெப்படி நான் இங்கு வராததற்கும் அவள் கிணற்றில் விழுவதற்கும் என்ன சம்பந்தம்?"
"நீங்கள் அடிக்கடி வந்து பார்த்திருந்தால் தண்ணீர் இழுக்க இவள் படும் சிரமத்தை உணர்ந்திருப்பீர்கள். ஒரு பம்பு செட் வைத்துக் கொடுத்திருப்பீர்கள். குழாயைத் திறந்தால் ஜலம் வந்திருக்கும். இவள் கிணற்றில் நீர் இழுக்கப் போயிருக்க மாட்டாள். கிணற்றுக்குள் விழுந்திருக்கவும் மாட்டாள்!"
"வாஸ்தவம்தான். நாளைக்கே நான் ஏற்பாடு பண்ணி விடுகிறேன்" என்ற ரங்கநாதன்