கமலாவைக் கனிவு ததும்பப் பார்த்தார்.
"பாவம்! கமலா ஈரத்தோடு நிற்கிறாளே! உடம்பு வெட வெடவென்று நடுங்குகிறதே. போம்மா, போ! உள்ளே போய் வேறு புடவை மாற்றிக்கொள்" என்றார். கல்யாணம் ரங்கநாத முதலியாரை அணுகி அவர் காதோடு பேசினான்: "வேறு மாற்றுப் புடவை இருக்கோ என்னமோ யார் கண்டது? இந்தச் சமயத்தில் நீர் வாடகையை வசூல் பண்ணுகிறேன் என்று வேறு வந்துவிட்டீர்."
ரங்கநாத முதலியார் உடனே மாசிலாமணியைப் பாரத்து, "பாவம், உங்கள் நிலைமையை யோசித்தாலும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. இன்னும் ஒரு மாசம் தவணை தருகிறேன். அதற்குள் மூன்று மாத வாடகையையும் சேர்த்துக் கொடுத்து விடுங்கள்!" என்றார்.
"அதற்கென்ன கூட இரண்டு மாச அட்வான்ஸும் சேர்த்துத் தருகிறேன்" என்றார் மாசிலாமணி தைரியம் அடைந்தவராக.
கல்யாணம் அந்தக் குடும்பத்துக்கு அடுத்தடுத்து மூன்று உதவிகளைச் செய்துவிட்ட திருப்தியுடன் புறப்பட்டான். கமலாவைக் காப்பாற்றியாகி விட்டது; பம்பு செட்டுக்கு ஏற்பாடு செய்தாகி விட்டது; வாடகை கொடுக்க ஒரு மாச அவகாசம் பெற்றுத் தந்தாகி விட்டது! "நான் வருகிறேன்; வீட்டுக்குப் போய் உடை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று கூறிப் பிரிந்தான்.
----------------
தொடரும்...