"வேண்டாம், ஸார்! 'புரொட்யூஸருக்குக் கோபம் வந்துவிடும். அப்புறம் அடுத்த நாடகத்தில் எனக்கு 'சான்ஸ்' தர மாட்டார். கதாநாயகிக்கு வேறு யாரையாவது 'புக்' பண்ணி விடுவார்" என்று சிரித்துக் கொண்டே கூறிய பவானி, டர்க்கி டவலால் முகத்தை ஒற்றிக் கொண்டு கல்யாணத்துடன் நடந்தாள்.
மாஜிஸ்திரேட் கோவர்த்தனன் மரத்தடி நாற்காலியில் அமர்ந்தார். பையன் வந்த போது அவர் வழக்கம்போல் டீ அல்லது லெமனேட் 'ஆர்டர்' செய்யவில்லை. விஸ்கி சோடா கொண்டு வரச் சொன்னார்.
ஒத்திகை முடிந்து பவானி புறப்பட்ட போது கல்யாணம், "என்னை வீட்டில் விட்டு விட்டுப் போகிறீர்களா?" என்று கேட்டான்.
"ஏன் உங்க கார் என்ன ஆயிற்று?" என்றாள் பவானி.
"அதற்கு உங்க புதுக் கார் பக்கத்தில் வந்து நிற்க வெட்கமாயிருக்கிறதாம். காலையில் ஷெட்டை விட்டுப் புறப்படமாட்டேன் என்று ஒரே பிடிவாதம்!"
"பொய்! தனித்தனியே நாம் போனால் வம்பளக்க முடியாது. அதனால் உங்கள் காரை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள்."
"உண்மைதான் பவானி! உங்களுடன் தனியே மனம் விட்டுச் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தால்தான் இரவு எனக்குத் தூக்கமே வருகிறது" என்று கூறிய கல்யாணம் காரின் முன்புறம் போய் ஏறிக் கொண்டான்.
சமூக சேவா சங்கத்தின் வெளி மதிலைத் தாண்டியதும் பவானி கேட்டாள். "அந்தப் பெண் கமலா கிணற்றில் விழுந்து விட்டாளாம். நீங்கள் காப்பாற்றினீர்களாமே?"
"ஆமாம். அது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?"
"மிஸ்டர் கல்யாணம், ராமப்பட்டணம் ரொம்பச் சின்ன ஊர். இங்கே நேதாஜி டில்லி