செங்கோட்டையைப் பிடித்தார் என்பதாகப் பத்திரிகையில் செய்தி படிக்க நேர்ந்தால்கூட ஒருவித சலசலப்பும் இராது. கிணற்றில் விழுந்த கமலாவைக் கல்யாணம் காப்பாற்றினார் என்றால் பெரிய பரபரப்பு ஏற்படும். காட்டுத் தீ போல் அந்தச் செய்தி பரவும்!"
"அது சரி, நீங்க இப்போ எங்கே போகிறீர்கள்?" என்றான் கல்யாணம். பவானி மாற்றுத் திசையில் காரைத் திருப்புவதைப் பார்த்துவிட்டு.
"கமலாவின் வீட்டுக்குத்தான்."
"எதற்கு?"
"சரிதான். அந்தப் பெண் கிணற்றில் விழுந்து சாகப் போனவள். புனர்ஜென்மம் எடுத்திருக்கிறாள். அவளை நான் பார்த்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்ல வேண்டாமா?"
கல்யாணம் தலையாட்டிச் சம்மதித்தான்.
அங்கே அவர்களுக்கு ரொம்ப விசித்திரமான வரவேற்பு காத்திருந்தது. கமலாவைக் கண்ணிலேயே காணோம். வந்தவர்களைப் பார்த்துக் காமாட்சி அம்மாள், "என்ன இரண்டு பேருமாகச் சேர்ந்து எங்கே இப்படிக் கிளம்பினீர்கள்?" என்று பாதி கிண்டலாகவும் பாதி அலட்சியமாகவும் கேட்டாள்.
"உங்க பெண் கிணற்றில் விழுந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன்...." என்று பவானி ஆரம்பிப்பதற்குள்,
"ஆமாம், விழுந்து விட்டாள். அப்படியே போயிருந்தால் தேவலாம். ஒரு கவலை விட்டிருக்கும். ஏழைகளுக்கெல்லாம் பெண்ணும் பிறக்கக் கூடாது. பிள்ளையும் இருக்கக் கூடாது" என்றாள் காமாட்சி.
"என்னடி வந்தவர்களை 'வா' என்று சொல்லாமல் ஏதேதோ உளறுகிறாய்" என்றார் மாசிலாமணி.