"கமலா, இப்போ எப்படி இருக்கிறது?"
"எனக்கு ஒன்றும் இல்லை" என்றாள் கமலா நறுக்கென்று. பவானி அவள் கழுத்தில் கரம் வைத்தாள், ஜுரம் இருக்கிறதா என்று பார்க்க. சரேலென்று அதை உதறிவிட்டுக் கமலா தலையையும் சேர்த்து இழுத்துப் போர்த்திக் கொண்டு சுவர் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
"கமலா! என்னிடம் உனக்கு என்ன கோபம், திடீரென்று?"
"எனக்கு யார் மீதும் ஒரு கோபமும் இல்லை. என்னைப் படைத்த கடவுளிடம்தான் எனக்குக் கோபம்."
"கமலா! உன் மனசை யாரோ ஏதோ சொல்லிப் புண்படுத்தியிருக்கிறார்கள். என்னுடன் உனக்குப் பேசப் பிடிக்கவில்லையானால் வேண்டாம். நான் வருகிறேன். ஆனால் நான் எப்போதும் உன் நலனை நாடுகிறவள்; என்னிடம் நீ கோபப்படுவதில் அர்த்தமில்லை. இதை இப்போது நீ புரிந்து கொள்ளா விட்டாலும் சீக்கிரமே உணர்வாய்!"
மளமளவென்று இதைச் சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பிய பவானி, மாசிலாமணி தம்பதியைத் திரும்பிக்கூடப் பாராமல் வாசலுக்குச் சென்றாள். காரில் ஏறிக் கொண்டு அதைக் கிளப்பினாள்.
----------------
தொடரும்...