"கமலா எங்கே?" என்றாள் பவானி.
"உடம்பு சுகமில்லை. காமிரா அறையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறாள்."
"ஒன்றுமில்லை. தலைவலியும் குளிர் காய்ச்சலும்தான். நாளைக்குச் சரியாகிவிடும்" என்றார் மாசிலாமணி.
"டாக்டர் என்ன சொல்கிறார்?"
"டாக்டர் எங்கே வந்து பார்த்தார்? அவர் வருவதானால் சும்மா வருவாரா? பணத்துக்கு எங்கே போகிறது?"
"ஒரு வார்த்தை விசுவிடம் சொல்லி அனுப்பியிருந்தால் நான் அழைத்து வந்திருப்பேனே?" என்றான் கல்யாணம்.
"வேண்டாம், வேண்டாம்! எதற்கு உங்களுக்குச் சிரமம்? ஏற்கனவே நாங்கள் உங்களுக்கு ரொம்பத் தொந்தரவு கொடுத்து விட்டோம். எனக்குத் தெரிந்த சுக்கு திப்பிலி வைத்தியம் பண்ணுகிறேன். சரியாகிவிடும்."
"பவானி! வாருங்கள், போகலாம்" என்றான் கல்யாணம் அவன் அங்கே ஒரு வினாடி தமதிக்கவும் விரும்பவில்லை.
"ஆமாம், ஆமாம். புறப்படுங்க, உங்களுக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டு, டென்னிஸ் கோர்ட்டு, நாடகக் கோர்ட்டு என்று ஏகப்பட்ட வேலை" என்றாள் காமாட்சி.
"கல்யாணம்! நீங்க காருக்குப் போங்க. நான் ஒரு நிமிஷம் கமலாவைப் பார்த்துவிட்டு வந்து விடுகிறேன்" என்றாள் பவானி. பிறகு காமாட்சியின் அனுமதிக்குக் காத்திராமல் காமிரா அறைக்குள் போய்த் தரையில் பாயில் படுத்திருந்த கமலாவை அணுகினாள்.