இரண்டு ஆசைகளுமே நிறைவேறாவிட்டாலும் பாதகமில்லை. ஏதோ வீட்டோடு இருந்து பெற்றோருக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாலே, எனக்குப் போதும். ஆனால் அதுவும் முடியாது போலிருக்கிறது. அப்பாவும் அம்மாவும் என் பெற்றோர்களே இல்லை என்பதும் நான் வளர்ப்பு மகள்தான் என்பதும் சமீபத்தில் எனக்குத் தெரியவந்தது. அத்துடன் இவர்கள் சுயநலம் கருதி என்னைப் பெரும் பணக்காரரான ஒரு கிழக் கோட்டானுக்கு விற்றுவிடத் தீர்மானித்துவிட்டார்கள். குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் என்ற கதையாகி விட்டது என் வாழ்க்கை.
இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் எனக்கு இல்லை. பவானி அக்காவாக இருந்தால் பணிந்து கொடுக்கவே மாட்டாள். ஆனால் நான் பவானி இல்லையே? இந்தத் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் சக்தியும் எனக்கு இல்லை. எனவே நான் யாருமறியாமல் ஓடிவிடப் போகிறேன். தற்கொலை செய்து கொண்டு சாவேனோ, பிச்சை எடுத்துப் பிழைப் பேனோ அல்லது எங்கோ கண் காணாத ஊரில் யார் வீட்டிலாவது பத்துப் பாத்திரம் தேய்த்துப் போட்டு வயிறு வளர்ப்பேனோ தெரியாது. இறைவன் விட்ட வழி.
உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் கிளம்ப மனம் இடம் தரவில்லை. அதனால்தான் எழுதினேன். தவறானால் மன்னித்து விடுங்கள். என் நினைவால் தாங்கள் அல்லல் .." **** கமலா கையெழுத்துப் போடப் போன சமயம் வாசலில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. பரபரப்புடன் எழுந்து சென்று ஜன்னல் வழியே பார்த்தாள். "யார் அது?"
"நான் தான் ரங்கநாதன்" என்று பதில் கிடைத்தது.
"அப்பா-அம்மா இல்லையே?"
"பரவாயில்லை. நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்."
கமலாவுக்குக் 'குப்' பென்று வியர்த்துவிட்டது. 'இப்போது என்ன செய்வது? கதவைத் திறப்பதா, கூடாதா?'