இரண்டொரு கணங்களே யோசித்த கமலா மனத்தைத் தேற்றிக் கொண்டாள். 'இந்தப் பட்டப் பகலில் என்னை என்ன செய்து விடும் அந்தக் கிழம்?' என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டு வாசல் கத வைத் திறந்தாள். 'ஏண்டி மாப்பிள்ளையை வாசலில் நிற்க வைச்சே பேசி அனுப்பிவிட்டாயா? அவர் தன்னை அவமதித்து விட்டதா எண்ணிக் கொண்டிருந்தால் என்ன பண்ணுவது?' என்று அம்மா கேட்டுத் தன்னைக் கோபித்துக் கொள்வாளே என்ற பயமும் கமலாவை இயக்கியது.
கதவைத் திறந்ததுமே சில்லென்ற வாடைக் காற்று ரங்கநாதனுக்கு முன்பாக வீட்டினுள் நுழைந்தது. மேஜை மேலிருந்து காகிதங்கள் பறந்தன. "அடடா! ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாய் போலிருக்கிறது. எல்லாம் பறந்து விட்டதே" என்ற ரங்கநாதன், ஒரு மூலையில் போய் விழுந்த, எழுதிய தாளைப் பொறுக்கி எடுக்க நடந்தார்.
"பாதகமில்லை, இருக்கட்டும். நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று பதறினாள் கமலா. வாய் குளறிப் பேசியதே தவிர உடல் செயலற்றுப் போயிற்று. ரங்கநாதன் செல்கிற அறையின் அந்த மூலைக்கு அவசரமாகத் தானும் விரைந்து அவர் மீது பட்டும் படாததுமாக நெருங்கி நின்று தாளைப் பொறுக்க அவளுக்குக் கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது. தான் அந்தக் கடித்தத்தில் எழுதியுள்ள ஏதோ ஒன்றை அவரிடமிருந்து மறைக்க முயல்வதாக அவர் கருதிவிடக் கூடாதே என்ற கவலை வேறு.
அவள் நின்ற இடத்தை விட்டு நகராமலே பதறிக் கொண்டிருக்க அவர் போய் அந்தத் தாளைக் குனிந்து எடுத்து விட்டார்.
கமலாவுக்கு உள்ளமெல்லாம் வெல வெலத்துப்போக உடலும் நடுங்க ஆரம்பித்தது.
"யாருக்குக் கடிதம்?" என்று கேட்ட படியே நிமிர்ந்து அவளைப் பார்த்தார் ரங்கநாதன்.
----------------
தொடரும்...