என் மனத்தில் ஓர் உறுத்தல் கமலா? இரண்டு நாட்களாக அந்த உறுத்தலை அனுபவித்துவிட்டு இனியும் தாளாது என்ற நிலையில்தான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். நீ வீட்டில் தனியாக இருப்பதே ஒரு விதத்தில் அனுகூலமாய்ப் போயிற்று. உன் பெற்றொர் இருந்தால் உன் னைப் பேசவே விடமாட்டார்கள்.
'அவளுக்கு என்ன தெரியும்? பெரியவர்கள் பார்த்துச் சொன்னால் சரி என்று கூறிவிட்டுப் போகிறாள்.' என்பது போல் எதையாவது சொல்லியே என்னைச் சரிகட்டிவிடுவார்கள். ஆனால் எனக்கு உன்னுடைய மனப்பூர்வமான சம்மதம் இந்தத் திருமணத்துக்கு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அது உன்னுடைய சுதந்திரமான முடிவாகவும் இருக்க வேண்டும். அப்படித் தெரிந்து கொண்ட பிறகுதான் இந்தக் கல்யாணம் நடக்கும். இல்லாதபோனால் அச்சடித்த திருமண அழைப்பிதழ்களை அடுப்பிலே போட்டுவிட்டுச் சிவனே என்று இருந்து விடுகிறேன்."
கமலாவின் மனம் கரைந்துருகிற்று. 'மெய்யாலுமே பெரிய மனிதர் என்றால் இவர்தாம் பெரிய மனிதர்' என்று எண்ணினாள். ஆனால் அவருக்கு என்ன பதில் கூறுவது என்பதொன்றும் அவளுக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. 'திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டால் மட்டும் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது? கல்யாணம் கையில் தாலியுடன் ஓடி வரப் போகிறாரா? அல்லது இந்தக் குடும்பத்தில் தரித்திரம் நீங்கிவிடப் போகிறதா? நான் தான் பெரிய படிப்புப் படித்து உத்தியோகத்தில் அமர்ந்துவிடப் போகிறேனா? அல்லது அம்மா என்னைத் தரித்திரப் பீடை என்று கரித்துக் கொட்டுவதை நிறுத்திவிடப் போகிறாளா? வசவும் திட்டும் அதிகரிக்கப் போகிறது. அவ்வளவுதான். வலிய வந்த ஸ்ரீதேவியை உதைத்துத் தள்ளினேன் என்பதாக அப்பாவுக்குக்கூட என் மீது ஆதங்கம் உண்டாகி வெறுத்துப் பேசலாம்.'
"நான்... நான்" என்று தட்டுத் தடுமாறித் தயங்கினாள் கமலா.
"வேண்டாம் கமலா, அவசரமில்லை. நீ இன்னும் கொஞ்சம் யோசித்துவிட்டே வேணுமானாலும் பதில் சொல்லு. பாதகமில்லை." என்றார் ரங்கநாதன். தொடர்ந்து, "இதோ பார், நீ பதிலே கூற வேண்டாம். இந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தால் உன் மனம் எனக்கு உடனே தெரிந்து போய்விடும் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது. ஆனால் நான் அப்படிச் செய்யப் போவதில்லை. கடிதத்தை இதோ மேஜையில் மேல் வைத்து அது மறுபடியும்