பறந்துவிடாமலிருக்க இந்தப் புத்தகத்தையும் அதன் மேல் வைக்கிறேன். இதை மறந்து விடுவோம். என்னையும் என் ஆசைகளையும்கூட சிறிது நேரம் மறந்துவிடுவோம். உன் வாழ்க்கை, உன் எதிர்காலம் இவற்றைப் பற்றிச் சிந்திப்போம். நான் உனக்கு வழங்க எண்ணுகிற எதிர்காலத்தில் வாலிப மிடுக்குடைய கணவன் என்ற ஓர் அம்சத்தைத் தவிர உனக்குச் சகலத்தையும் என்னால் கொடுக்க முடியும். அன்பும் ஐசுவரியமும் சாதிக்கக்கூடிய சகலத்தையும் நீ பெற லாம். யௌவனம் என்னிடமிருந்து விடை பெற்றுவிட்டதேயொழிய நான் இன்னமும் திடகாத்திரமாகவே இருக்கிறேன். ஊர் ஊராகப் போக வேண்டுமா? உல்லாசமாக உலகைச் சுற்றி வர வேண்டுமா? நகை நட்டு பூண வேண்டுமா? எதுவானாலும் சொல். உன் ஆசைகளையெல்லாம் கட்டளை களாக மதித்து நிறைவேற்றுவேன். இதற்கெல்லாம் பிரதியாக நான் உன்னிடம் கேட்பது மனைவி என்ற ஸ்தானத்தில் அமர்ந்து அன்பையும் தோழமையையும் எனக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றுதான் கமலா! அபரிமிதச் செல்வம் என்ற கடலுக்கு மத்தியில் தனிமை என்ற ஏகாந்தத் தீவில் இருக்கிறேன் நான். என்னிடம் கொஞ்சம் இரக்கம் காட்டுவாயா?"
கமலாவின் நெஞ்சம் நெகிழ்ந்தது. கண்களில் கருணை பொங்கியது. அதே நேரத்தில் தன்னால்கூட ஒருவருக்கு உதவ முடியும். தன்னிடம்கூடக் கெஞ்சிக் கேட்கிற மாதிரியாக ஏதோ ஓர் அம்சம் இருக்கிறது என்ற எண்ணத்தில் கர்வம் எட்டிப் பார்த்தது!
'முடியாது என்று முகத்தில் அடித்ததுபோல் இவருக்குப் பதில் கூறி விடுவது பெரிய காரியம் இல்லை. பிறகு அம்மா அப்பாவின் கோப தாபங்களுக்கு ஆளாகாதிருக்க வீட்டை விட்டு ஓடிவிடுவதும் பெரிய விஷயமல்ல.
அப்படி ஓடிச் சென்ற பிறகு பிச்சை எடுப்பதோ அல்லது வேலை செய்து பிழைப்பதோ கூடச் சிரமமில்லை. ஆனால் அப்படித் தன்னந்தனியாகப் பாதுகாப்பின்றி உலகில் வாழும் போது தன்னைப் புதிய ஆபத்துக்கள் சூழாது என்பது என்ன நிச்சயம்? இந்த யுத்த காலத்தில் உணவுக்குத்தான் பஞ்சமே யொழியக் கயவர்களுக்கா பஞ்சம்? இந்தப் பாழும் உலகையே துறந்து செத்தொழியலாம்தான் ஆனால் அதனால் என்னத்தைச் சாதித்ததாகும். எதை நிரூபித்ததாகும்? அதைவிட....அதைவிட....'
ஒரு முடிவுக்கு வந்தவளாக ரங்கநாத முதலியாரை நிமிர்ந்து பார்த்தாள் கமலா.