கொண்டிருக்கிறார். இன்றைக்கு முதல் கேஸ் தங்களுடையதுதான். தெரியுமல்லவா?" என்று கேட்டார் மற்றொருவர்.
"வெரி ஸாரி, ஆனால் என்னால் ஒன்றும் தாமதமாகாது. இன்னும் ஐந்தே நிமிஷங்களில் நான் கோர்ட்டில் ஆஜராகி விடுவேன்" என்ற பவானி விரைவாகத் தன் அறையை நோக்கி நடந்தாள்.
அவள் அப்பால் சென்றதும், "இன்றைக்கு என்ன கல்யாணசுந்தரத்தைக் காணோம்?" என்ற சந்தேகத்தைக் கிளப்பினார் ஒரு வம்பு விரும்பி. "வழக்கமாய்ப் பவானி வரும்போது அவளை 'ரிஸீவ்' பண்ணத் தயாராக முன்னால் வந்து நின்று கொண்டிருப்பானே?"
"மதராஸிலிருந்து 'எவாகுவீ' குடும்பம் ஒன்று வந்திருக்கிறதல்லவா? அவர்கள் வீட்டுக்குக் காய்கறி, உப்பு-புளி வாங்கிக் கொடுக்க மார்க்கெட்டுக்குப் போயிருப்பான்" என்று ஏளனமாய்க் கூறிச் சிரித்தார் இன்னொருவர்.
"நீர் என்னங்காணும் பழங் கதை பேசிக் கொண்டிருக்கிறீர்? அவர்களுக்கும் கல்யாணத்துக்கும்தான் ஒத்துக் கொள்ளாமல் போய் விட்டதே! அவர்கள் இவன் பேரில் கேஸ் போட்டிருக்கிறார்களே. பவானிதானே அந்தக் குடும்பத்தின் சார்பில் ஆஜராகிறாள். உமக்கு ஒன்றுமே தெரியாதா?"
"ஓ, ஆமாம், ஆமாம். நான் கொஞ்ச நாட்களாய் ஊரில் இல்லை. மறந்து போச்சு." "என்ன மறந்து போச்சு? வழக்கு விஷயமாகக் கேள்விப்பட்டதா? அல்லது நீர் ஊரில் இல்லை என்பதா?"
"இரண்டுமேதான்!"
"ஆமாம், ஆமாம். பவானியைப் பார்த்தால் சிலருக்கு எல்லாமே மறந்து விடுகிறது. இது பூலோகமா சொர்க்கமா என்பது கூட மறந்து விடுகிறது. நாலு நாட்கள் சிரமப்பட்டுத் தயாரித்துக் கொண்டு வந்திருந்த முக்கியமான சட்டப் பாயிண்டுகளை யெல்லாம் மறந்து விட்டுத் தடுமாறத் தொடங்குகிறார்கள்!"
"ஓய், நீர் என்ன பொதுப்படையாகப் பேசுகிறீரா? உம்ம அனுபவத்தைச் சொல்கிறீரா?" என்ற கேள்வி பிறக்கக் குபீரென்ற சிரிப்பொலி கோர்ட் கட்டிடத்தைக் கிடு கிடுக்கச் செய்தது.