"உஷ்! கோர்ட் கூடுகிற நேரம்!" என்று எச்சரித்தார் ஒருவர்.
"அது சரி, ரங்கநாத முதலியார் அல்லவா கோபாலகிருஷ்ணன் மீதும் அவர் மகன் மீதும் கேஸ் போட்டிருப்பதாகச் சொன்னார்கள்?" என்று மீண்டும் ஆரம்பித்தார் மறதிப் பேர்வழி.
"நாசமாய்ப் போச்சு! திருநீர்மலையில் கல்யாணம் நின்றுபோனதில் ஆரம்பித்து இவருக்கு மறுபடியும் எல்லாவற்றையும் ஆதியோடு அந்தமாக விளக்க வேண்டும் போலிருக்கிறதே!"
"வேண்டாம் ஐயா! எதற்கு வீண் சிரமம்? அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் அவர் மறுபடியும் எல்லாவற்றையும் மறந்துவிடப் போகிறார். இதற்கு விவரிப்பானேன்?"
"அகதிகள் நிவாரணத்துக்கு நாடகம் நடத்தறேன் என்று ஊரிலே இருக்கிறவன் தலையிலெல்லாம் டிக்கெட்டை வலுக் கட்டாயமாகக் கட்டறது. அப்புறம் நாடகத் தேதியன்று கல்யாணத்தை நிறுத்தத் திருநீர்மலைக்குப் போய்விடுகிறது. இது என்ன நியாயங்கறேன்?"
"அதையும் ஒரு பாயிண்ட்டாகப் பவானி சேர்த்துக் கொண்டிருக்கிறாள், சுவாமி! மோசடிக் குற்றச்சாட்டு, கல்யாணத்தை நிறுத்துவதற்காக அந்த வாலிபக் கும்பல்மேல் தாம் கேஸ் போட்டால் நன்றாயிராது என்பதால் கமலாவின் குடும்பத்தைப் போடச் சொல்லியிருக்கிறார் ரங்கநாதன். ஆனால் பவானிக்கு ஃபீஸ் அவர்தான் தருகிறார். எவ்வளவு தெரியுமா?"
"எவ்வளவு?"
"ஐந்து இலக்கம்!"
"என்ன, என்ன? எனக்கு மூர்ச்சை போட்டு விழணும் போலிருக்கு!"
"எங்களுக்காகப் பார்க்க வேண்டாம். கோர்ட் தாழ்வாரமாச்சேன்னு யோசிக்க வேண்டாம். மூர்ச்சை போட்டு விழுணும்னா தாராளமாய் நீர் விழலாம்! கோலி சோடாவுக்கு நான் கோர்ட் பியூனிடம் காசு தருகிறேன்!"