ஏமாற்றமும் வெட்கமும் அவமானமும் பொங்க அவன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தான். காரில் ஏறி அதனைக் கிளப்பினான். கை போன போக்கில் கார் திரும்பிச் சென்றது. வெகு நேரத்துக்குப் பிறகு அப்புறம்தான் அவனுக்கு ஏலமலை எஸ்டேடேடுக்குப் போகும் மலைப்பாதையில் கார் ஏறிக்கொண்டிருப்பது அறிவுக்கு எட்டியது.
கமலாவும் தானும் அடிக்கடி சந்தித்து உரையாடும் பாறையை பவானி ஒரு சமயம் அவனுக்குச் சுட்டிக் காட்டி யிருந்தாள். பவானியும் கமலாவும் தனித் தனியேயும் அங்கு வருவதுண்டாம்; சேர்ந்தும் வருவார்களாம்: தனித் தனியே வந்த பிறகு ஒருவர், மற்றவர் அங்கே ஏற்கனவே இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைவதுண்டாம். 'அந்தப் பெண்ணை அவ்வளவு தூரம் கவரும்படி இங்கே என்னதான் இருக்கிறது, பார்த்துவிடுவோமே' என்று தீர்மானித்துக் காரை விட்டு இறங்கினான் கல்யாணம். குடை விரித்தாற்போல் நிழல் பரப்பிய சரக்கொன்றை மரம். பாறையின் மேல் பரப்பு தண்ணென்று இருந்தது. காலைச் சூரியனின் ஒளியில் கொன்றைப் பூக்கள் சிறிய சிறிய பசும்பொன் மணிகளாக ஜொலித்தன. மரத்தின் அடியில் பாறை மேல் அமர்ந்தான் கல்யாணம்.
'புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானோதயம் ஏற்பட்டதாம். எனக்கு இந்தச் சரக் கொன்றை மரத்தடியில் தெளிவு பிறக்கக் கூடாதோ?'
எத்தனை நேரம் அப்படி அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தானோ? சூரியன் உச்சி் வானத்தை நெருங்கியபோது கிளைகளினூடே இருந்த இடைவெளியில் ஒரு கிரணம் இடம் மாறிப் புகுந்து நேராக அவன் முகத்தைத் தாக்கிக் கண்களைக் கூசவைத்தது. சட்டென்று நகர்ந்துகொண்ட அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து ஐம்பது! ' அடடா இன்னும் பத்து நிமிஷங்களுக்குள் கோர்ட்டில் இருக்க வேண்டுமே.
இல்லாத போனால் நீதிமன்றத்தை அவமதித்ததாகி விடுமே' என்று எண்ணியவனாகப் பரபரப்புடன் எழுந்து ஆடையிலிருந்து தூசி, இலைச் சருகுகளைத் தட்டினான். கைக்குட்டை, கார் சாவி எதையாவது விட்டு விட்டுப் போய்விடப் போகிறோம் என்று சுற்று முற்றும் நோக்கிய சமயம் ஓர் எழுத்து பாறையோரமாகத் தென் பட்டது. 'பாறையின் மேற்குப் பக்கம் சட்டென்று யார் கண்ணிலும் படாதபடிக்கு யாரோ என்னமோ செதுக்கி யிருக்கிறார்கள்.அது