என்னவாக இருக்கும்!"
கல்யாணம் இரண்டடி எடுத்து வைத்துப் பாறையின் மறைவான பக்கத்தை அடைந்தான். இப்போது எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன. இரண்டே வார்த்தைகள்தாம். கமலாவின் கல்யாணம்.
கல்யாணத்தின் மேனி சிலிர்த்தது. அவளைத் தான் விரும்புவதாகக் கொஞ்சம் கூடக் காட்டிக் கொள்ளாத போதிலும் பவானியிடம் தன் மனம் ஈடுபட்டிருப்பதை அவளிட மிருந்து மறைக்காத போதிலும் இப்படி அழுத்தம் திருத்தமாகப் பாறையில் செதுக்குவதென்றால் அவள் எவ்வளவு உறுதியோடு இருந்திருக்க வேண்டும்? எத்தனை ஆசைகள் எத்தனை எதிர்பார்ப்புகளைச் சுமந்து கொண்டு அவள் நாள் கணக்கில் செயல்பட்டுக் கூரிய கல்லால் அந்தப் பாறையில் ஆழச் செதுக்கியிருக்க வேண்டும்! அழியாத் தன்மை எழுத்தில் மட்டுமா இருந்தது? அதன் அர்த்தத்திலும் அல்லவா தொனிக்கிறது! 'கமலாவின் கல்யாணம்.' 'வின்' என்ற விகுதியிலே எத்தனை உறுதி!
அத்தனை உறுதியோடு இருந்தவள் கிழவனை மணக்கச் சம்மதிப்பானேன்? தற்கொலை செய்து கொள்வது பாபம் என்பது மட்டுமல்ல அதனால் கல்யாணத்துக்குக் கெட்ட பெயர் வரும் என்ற காரணமாகத்தான் இருக்கும். 'கல்யாணத்தை நம்பி மோசம் போனாள்' உயிரை விட்டாள்' என்று ஊரார் கதை பேசாமலா இருப்பார்கள்?
கல்யாணத்தைக் கரம் பிடிக்கவும் முடியாது; தற்கொலையும் சாத்தியமில்லை என்று நிச்சயமாகி விட்டபிறகு அவள் தன் எதிர்காலப் பாதுகாப்புக்காக மட்டுமே திருமணம் புரிந்து கொள்ளச் சம்மதித்திருக்கிறாள். மனத்தால் கல்யாணத்தை வரித்த பின்னர் அவள் வேறு ஓர் இளைஞனுடன் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? அதைவிட ரங்கநாத முதலியாரை மணப்பதே மேலல்லவா?
இதையெல்லாம் உத்தேசித்தே 'கமலா மனப்பூர்வமாகச் சம்மதித்துத்தான் இந்தக் கல்யாணம் நடக்கிறது' என்று பவானியும் தன்னிடம் கூறியிருக்கிறாள். தனக்குத்தான் புரியாமல் போய்விட்டது.
திருமணத்தை நிறுத்தியபோது கமலாவின் நன்றிக்குப் பாத்திரமாவதற்குப் பதில் கோபத்துக்குத்