தொழில் என்று பேசிக் கொள்கிறார்கள், போதுமா?"
"சிவ சிவா!" என்று காதுகளைப் பொத்திக் கொண்டார் மாசிலாமணி.
"சிவனையும் விஷ்ணுவையும் கூப்பிடுவானேன்? இதோ, உங்க பெண்டாட்டி கையிலே இருக்கே, நகைப் பெட்டி அது யாருடையது? எங்கிருந்து வந்தது? அது ஏன் இன்னும் அதன் சொந்தக்காரரிடம் போய்ச் சேரவில்லை?"
"ஐயையோ! இதென்ன அபாண்டம்" என்றார் மாசிலாமணி.
"அபாண்டமோ பிரும்மாண்டமோ, எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு இருக்கிறது ஒரே பிள்ளை. கோர்ட்டிலே அவன் ஏதோ க்ஷண நேர வேகத்திலே ஏதோ சொல்லிவிட்டான் என்பதற்காக அவன் கழுத்திலே இந்தப் பென்னை கட்டி விடலாம் என்று பார்க்காதீகள். என் உடம்பில் உயிர் உள்ளவரை அது நடக்காது. நாங்கள் ரொம்ப ஆசாரம் பார்க்கிறதில்லை; என் வீட்டுக்காரர் முற்போக்குக் கொள்கைகளை உடையவர்தான்; அதற்காக எச்சில் பண்டங்களைத் தொட்டுக் கொண்டாடுகிற்தில்லை!" செல்லம்மாள் படபடவென்று இப்படிப் பொரிந்து தள்ளிவிட்டுத் திரும்பி விடுவிடு என்று நடந்துவிட்டாள்.
மாசிலாமணி அவமானம் தாங்காமல் மேல் துண்டால் முகத்தை மூடிக் கொண்டார்.
நகைப் பெட்டியை அப்போதும் விட மனமில்லாமல் இறுக அணைத்துக் கொண்ட காமாட்சி, "கிணற்றிலே விழுந்தியே - அப்பவே போயிருக்கக்கூடாதா நீ! இன்னும் என்னவெல்லாம் அவமானங்களை எங்களுக்குத் தேடி வைக்கப்போகிறாயோ? நானாக இருந்தால் மலையிலேயிருந்து குதித்துப் பிராணனை விட்டு விடுவேன்" என்று கூறிக் கமலாவின் கன்னத்தில் ஒரு முறை குத்தி நிமிண்டிவிட்டு உள்ளே சென்றாள்.
கமலா அழவில்லை. அழுது அழுது கண்ணீரெல்லாம் வற்றி வறண்டுவிட்டது போல் நின்றாள். 'நானாக இருந்தால், மலையிலேறிக் குதித்தாவது பிராணனை விட்டுவிடுவேன்' என்று காமாட்சி கூறியது திரும்பத் திரும்ப அவள் மனத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
----------------
தொடரும்...