"நீ என்ன திருடனா? எதற்குச் சிறை சென்றாய்? ஏன் தப்பித்து ஓடி வந்தாய்?"
"பெண்ணே, அதெல்லாம் பெரிய கதை. கூற எனக்குச் சக்தியில்லை."
"வேண்டாம், வேண்டாம்! நீ பேசவே வேண்டாம்!" என்று பயந்து பதறினாள் கமலா.
"பெண்ணே, பிறருக்கு உபகாரம் பண்ணக் கற்றுக் கொள். வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாம் மறைந்து இதயத்தில் மகிழ்ச்சி நிரம்ப அதுதான் வழி!"
"சரி, அப்படியே செய்கிறேன். உன்னால் நான் அடைந்த விவேகத்தை முதலில் உனக்கே பயன்படுத்துகிறேன். உனக்கு உதவ ஓடிப் போய் ஒரு டாக்டரை அழைத்து வருகிறேன்."
அவன் முகத்தில் கலவரம் தோன்றியது. "கூடவே கூடாது! டாக்டர் வந்து என்னைப் பரிசோதித்தால் முதலில் போலீசுக்குத்தான் தகவல் தெரிவிப்பார்."
"பின்னே, டாக்டரை அழைக்காமல் இருந்துவிட்டால் நீ சாகத்தான் போகிறாய். எம தூதர்களா, அல்லது போலீஸா? இருவரில் யார் தேவலாம் என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும். உனக்குத்தான் இது விஷயங்களில் அனுபவம் அதிகமாயிருக்கிறது!"
"பெண்ணே வலி, என் தோளைக் கடப்பாறையால் தாக்குவது போல் வேதனை தரவில்லையானால் நான் உன் பேச்சை ரசித்துச் சிரிப்பேன்."
"நான் பேசவும் வேண்டாம்; நீ ரசிக்கவும் வேண்டாம்! நான் என்ன செய்யட்டும்? உனக்கு எப்படி உதவட்டும்? அதைச் சொன்னால் போதும்."
"என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாயல்லவா?"
"சத்தியமாகத் துரோகம் பண்ண மாட்டேன். தெய்வமே, நம் இருவரையும் இங்கே ஒரே சமயத்தில் ஒருவருக்குக்கு ஒருவர் உதவ அனுப்பியதாய் எண்ணுகிறேன். இல்லாத போனால்