Flexi Classics தொடர்கதை - அரும்பு அம்புகள் - 50 - அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி
அத்தியாயம் 50 -- பவானியின் காதலன்
உமாகாந்தனுக்குத் தோளில் மருந்து வைத்துக் கட்டுப் போட்டு விட்டு நிமிர்ந்த டாக்டர், பவானியைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை புரிந்தார். "உயிருக்கு ஆபத்தில்லை" என்றார்.
"என் வயிற்றில் பாலை வார்த்தீர்கள்" என்று கூறிப் பவானி விழியோரம் துளிர்த்திருந்த கண்ணீரை நடு விரலால் துடைத்துக் கொண்டாள்.
"ஓய்வு தேவை; ஒரு வாரம் பத்து நாட்கள் ஆகும் உடம்பு நடமாடுகிற அளவில் தெம்பு பெற. ஏராளமாய் இரத்தம் இழந்திருக்கிறான் அல்லவா?" என்றார் டாக்டர். "ரொம்ப தாங்ஸ்" என்ற பவானி, கைப் பையைத் திறந்து அதிலிருந்து ஒரு மணிபர்ஸை எடுத்தாள்.
"இருக்கட்டும். ஃபீஸ் ஒன்றும் இப்போ தேவையில்லை" என்றார் டாக்டர். "நாளைக்குப் போலிசார் என் மீது வழக்குத் தொடுத்தால் நீங்கள் என் சார்பில் வந்து இலவசமாக வாதாடுங்கள் போதும்."
பவானி புரியாதது போல் நடித்து, "கேஸா, உங்கள் மீதா? எதற்கு?" என்றாள். டாக்டர் சிரித்தார். "பவானி! எனக்கு வயது நாற்பத்தைந்து ஆகிறது. இருபத்திரண்டு வருஷசங்களாக பிராக்டிஸ் பண்ணுகிறேன். கல் குத்தியதால் ஏற்பட்ட காயத்துக்கும் துப்பாக்கி தோட்டா கிழித்துச் சென்ற காயத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போகுமா? மலைச் சரிவில் சறுக்கி விழுந்து கூரிய பாறை குத்திக்காயம் பட்டு விட்டது இவனுக்கு என்கிறாய். இவன் யார்? திடுமென்று ராமப் பட்டணத்தில் எப்படி முளைத்தான்? உனக்கு எவ்வாறு சிநேகமானான்? கமலாவும் நீயும் இவனுமாக ஏலமலைச் சரிவில் எதற்காக ஏறிப் போக வேண்டும்?
அங்கே இவன் எதற்காக விழுந்து தொலைக்க வேண்டும்? அப்படியே விழுந்து தொலைத்தாலும் இயற்கையான விதத்தில் தலையிலோ முழங்கை முழங்காலிலோ அடிபட்டிருக்கக் கூடாதா? வலது தோளில் சற்றும் பொருந்தாத விதமாக எதற்கு அடிபட்டுக் கொள்ள வேண்டும்? பவானி! இதையெல்லாம் கேட்க வக்கீலுக்குப் படிக்க வேண்டியதில்லை. டாக்டருக்குக் கூட எழக் கூடிய சந்தேகங்கள்தாம்."