பவானி, "டாக்டர் ... வந்து ...." என்று ஏதோ கூற ஆரம்பித்தாள். அவள் மேலே பேசுவதற்கு முன் உள்ளங்கையைக் காட்டி நிறுத்தச் சொன்னார்.
"இதோ பார்! நான் கேள்வியும் கேட்க வேண்டாம்; நீ பதிலும் கூற வேண்டாம்! அது மேலும் மேலும் என்னை இந்தக் கேஸில் சிக்க வைத்துப் போலீஸாரின் அதிருப்தியையும் சம்பாதித்துத் தரும்! பவானி! நான் போலீஸுக்கு உடனே தகவல் கொடுக்கக் கடமைப் பட்டவன்.நியாயமாக அவர்களிடம் சொல்லாமல் இவனுக்குச் சிகிச்சை செய்ய ஆரம்பித்ததே தவறு. ஆனால் இந்த ஊரில் அநேகமாக எல்லாருமே பவானியிடம் உள்ள ஒரு வசீகர சக்திக்கு அடிமையாவது போல் நானும் வசப்பட்டிருக்கிறேன். அதனால்தான் உன் கோரிக்கைக்கு இணங்கினேன். இங்கு நான் வந்து போனதை யாருக்கும் சொல்ல மாட்டேன்; நீயும் மறந்து விடு. இல்லாத போனால் எனக்கு மட்டுமில்லை. உன் பராமரிப்பில் உள்ள இவனுக்கும் ஆபத்து.
"ஜுரம் வரும் இவனுக்கு. நூற்றிரண்டுக்கு மேல் போனால் இந்த முதல் மருந்தைக் கொடுத்துக் குறைக்க வேண்டும். இரண்டாவது மருந்தை நாளைக்கு மூன்று வேளை ஒரு வாரத்துக்குச் சாப்பிட வேண்டும்."
"ஆகட்டும் டாக்டர்" என்றாள் பவானி, "பூர்வ ஜன்ம பூஜாப் பலனாகத்தாத்தான் எனக்குக் கமலாவும் நீங்களும் ஆபத்பாந்தவர்களாக உதவ வந்தீர்கள்." மேலே பேச முடியாமல் அவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
அவர் அப்பால் போனதும் அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் பீறிட்டு எழ, அவள் உமாகாந்தின் கட்டிலருகே மண்டியிட்டு அமர்ந்து தலையணையில் அவன் முகத்துக்கு அருகே தன் வதனத்தையும் வைத்துக் கொண்டு விம்மி விம்மி அழலானாள்.
கமலா பதறிக் கொண்டு தன்னைத் தேடி வந்தது, அவள் கூறியதைக் கேட்டுத் தான் துடிதுடித்தது, அவசரம் அவசரமாகக் காரை ஓட்டிக் கொண்டு சென்றது, அரை மயக்க நிலையில் இருந்த உமாகாந்தை இருவரும் இருபுறமும் தாங்கிக் கொண்டு மெல்ல நடத்திக் காருக்கு அழைத்து வந்தது, காரில் படுக்க வைத்தது, பிறகு வீடு சேர்ந்ததும் மாமா உதவியுடன் உமாகாந்தை மாடிக்குத் தூக்கிச் சென்றது, தன் அறையில் தன் கட்டிலிலேயே அவனைப்