படுக்க வைத்தது. அங்கே அவன் நினைவிழந்து மூர்ச்சையானதும் உள்ளமெல்லாம் பதற, ஊனெல்லாம் நெக்குருக டாக்டருக்குப் போன் செய்தது, அவர் வந்து பார்த்துவிட்டுத் திரும்பியது எல்லாம் கனவில் நடந்தவை போலிருந்தன. ஆனால் அவை கனவல்ல, உண்மையே என்பதற்குச் சாட்சியமாய் உமாகாந்தன் அவள் படுக்கையிலே சயனித்திருந்தான். 'எப்படி இருந்த செழுமையான மேனி எப்படி உருத் தெரியமல் மெலிந்து வாடியிருக்கிறது? எப்படி இருந்த சிவந்த எழில் வதனம் இன்று வெளிறிக் கிடக்கிறது!'
அந்த வினாடி வரையில் கடமையில் கண்னும் கருத்துமாயிருந்த பவானி இனி செய்ய ஒன்றுமில்லை. உமாகாந்தன் கண்விழிக்கக் கடவுளைப் பிரார்த்தித்தப்படி காத்திருக்க வேண்டியதுதான் என்ற நிலையில் கண்ணீர் பெருகுவதற்கு இடம் அளித்தாள். அது கரை உடைத்துப் பொங்கியது.
கமலா அவளை நெருங்கி மெல்ல அவள் தோளில் கரம் வைத்தாள்.
"இல்லை கமலா! என்னைச் சமாதானப்படுத்த முயலாதே! அழவிடு. இது நாலு வருஷங்களாக நான் தேக்கி வைத்திருக்கும் பிரிவுத் துயர்" என்றாள் பவானி.
"அதுதான் வந்துவிட்டாரே அக்கா!"
"ஆமாம். வந்துதான் விட்டார் கமலா. நாலு ஆண்டுகளுக்குப் பிறகு ஞாபகமாக என்னைத் தேடிக் கொண்டு வந்தவர் எப்படி வந்து சேர்ந்திருக்கிறார் பார்த்தாயா? ஸி.ஐ.டி.களால் துரத்தப்பட்டு, வெய்யிலில் காய்ந்து, மழையில் நனைந்து, நாயாக அலைந்து, மறைந்து திரிந்து, மெலிந்து தேய்ந்து, கடைசியில் அவர்கள் துப்பாக்கிக் குண்டின் தாக்குதலுக்கும் ஆளாகி, மயங்கிய நிலையில் எனக்குத் திரும்பிக் கிடைத்திருக்கிறார் கமலா! அப்போதும்கூட எத்தனை களையாக இருக்கிறது பார்த்தாயா, இவர் முகம்!" என்ற பவானி உமாகாந்தின் கன்னங்களை மெல்ல வருடினாள். தொடர்ந்து கண்ணீரைப் பெருக்கி விசித்து விசித்து அழுதாள்.
சற்றுநேரம் பொறுத்துக் கமலா, "அக்கா! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களை இந்த நிலையில் விட்டு விட்டுப் போக எனக்கு மனமில்லை. ஆனால் எனக்கு ரொம்ப நேரமாகிறது. 'தீப்பெட்டி வாங்கி வருவதாகக் கூறிப் புறப்பட்ட பெண் என்ன ஆனாள், எங்கே போனாள்?' என்று புரியாமல் அம்மா என்னைச் சபித்துக் கொண்டிருப்பாள். எனக்குச் சீக்கிரம் வீடு திரும்ப