வேண்டும். வரட்டுமா?"
"நானும் வருகிறேன் கமலா. உன்னைக் காரில் வீட்டில் இறக்கி விட்டு விட்டு வந்து விடுகிறேன்."
"வேண்டாம் அக்கா! இவரைக் கவனித்துக் கொள்ள வேண்டியது உங்கள் முதல் பொறுப்பு. நான் போய்க் கொள்கிறேன்."
"இவரைத் எனக்குத் தேடித் தந்த உன்னைக் கவனித்துக் கொள்வதும் என் பொறுப்புத் தான். மாமா இவரைச் சற்று நேரம் பார்த்துக் கொள்வார். மேலும் இவருக்கு நான் மருந்து வாங்கி வரவும் வேண்டும். வா, போகலாம்" என்ற பவானி முகத்தைத் துடைத்துக் கொண்டு வீட்டிலிருந்த பிரிக்கப்படாத இரண்டு நெருப்புப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
கமலாவின் வீட்டை அடைவதற்கு முன்பு உமாகாந்த் பற்றிய ரகசியத்தைக் காப்பதாக அவளிடம் உறுதி மொழி பெற்றுக் கொண்டாள் பவானி. அவ்வாறே வாக்களித்த கமலா, "அக்கா! இந்தப் பக்கம் தப்பியோடிய கைதி உலாவுவதாகவும் ஸி.ஐ.டி.கள் அவனைத் தேடுவதாகவும் பேச்சு வந்தபோது, 'சட்டரீதியாக அந்தக் கைதிக்கு உதவ முடியுமா என்று பார்ப்பேன்' என்றுதான் சொன்னீர்களே யொழிய அந்தக் கைதி உங்கள் காதலனாகவும் இருகக் கூடும் என்பதாகப் பிரஸ்தாபிக்கவே யில்லையே? அப்படி நீங்கள் சந்தேகித்ததை என்னிடம் மறைத்துத்தானே விட்டீர்கள்" என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.
"உண்மைதான் கமலா. எங்கள் காதல் விவகாரம் ஒரு பெரிய கதை. ஒரு நாள் சாவகாசமாகச் சொல்கிறேன்" என்றாள் பவானி.
"உங்கள் காதலனும் இப்படியேதான் எனக்கு வாக்களித்திருக்கிறார்! தம் தேகத்தில் சக்தி திரும்பியதும் தம்மைப் பற்றிய விவரங்களை ஆதியோடு அந்தமாக விவரிப்பதாய்க் கூறினார். அதன் பிறகுதான் உங்களை அழைத்துப் போக நான் வந்தேன்."
"அவர் வாழ்வின் சமீப நிகழ்ச்சிகளில் எனக்கே புரியாத சில மர்மங்கள் இருக்கின்றன கமலா. கொஞ்சம் தெம்பு பெற்று அவர் அந்தப் புதிர்களை விடுவிக்க வேண்டும் என்றுதான் நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றாள் பவானி.
----------------
தொடரும்...