சிறைவாசம் செய்தவன் அல்லவா?" என்ற போது அவன் விழிகளில் அத்தனை உடல் வேதனையிலும் தோன்றாத கண்ணீர் தளும்பி நினறது.
"இல்லை, இல்லை! பவானி அக்கா அப்படி ஒரு நாளும் நினைக்கவேமாட்டாள். இந்தப் பக்கம் தப்பி ஓடிய கைதி ஒருவன் வளைய வருவதகாவும் ஸி. ஐ. டி. கள் அவனைத் தேடுவதாகவும் கேள்விப்பட்டு அக்காவே என்னிடம் கூறியிருக்கிறாள். அது மட்டுமில்லை; ஒரு வேளை அக்கைதியை நான் காண நேர்ந்தால் உடனே தன்னிடம் வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வக்கீல் என்ற முறையில் தன்னால் இயன்ற உதவியைச் செய்வதாகவும் சொன்னாள். அதனால் நான் போய்ச் சொன்னவுடனே அவள் ஓடோடி வருவாள். ஆனால் ஒன்று வக்கீல் என்ற முறையில் மட்டும் அவள் உனக்கு உதவப் போவதாக நான் கருதவில்லை. இன்னுயிர்க் காதலி என்ற உரிமையோடும் உதவப் போகிறதாக எண்ணுகிறேன். என்ன நான் சொல்வது சரிதானா?"
உமாகாந்தன் பலவீனமாகப் புன்னகை புரிந்து கண் சிமிட்டினான். பிறகு பேசவும் சக்தி இழந்தவனாய் இமைகளை மூடிக் கொண்டான்.
கமலா அவன் அருகே குனிந்து, "கொஞ்சம் தாமதமானாலும் கவலைப் படாதே. தைரியமாக இரு!" என்று கூறிவிட்டு மலைப்பாதையை நாலே எட்டில் அடைந்து ஓட்டமும் நடையுமாகக் கீழே இறங்க ஆரம்பித்தாள். பஸ் வரத் தாமதமானால் வேறு யாராவது காரிலோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ அந்தப் பக்கமாக வர மாட்டார்களா? ராமப்பட்டணம் வரை தன்னை ஏற்றிக் கொண்டு போக மாட்டார்களா?" என்று ஏங்கினாள். அதே சமயம் தன் அவசரத்துக்கு அவர்களிடம் என்ன காரணம் கூறுவது என்றும் குழம்பினாள்.
நல்ல வேளையாக அவளை அதிகம் தவிக்க விடாமல் பஸ் ஒன்று இறக்கத்தில் வந்தது. அதிர்ஷ்ட வசமாக அதில் இடமிருந்து அவள் ஏறிக் கொள்ளவும் முடிந்தது.
----------------
தொடரும்...