அத்தனை நேரம் நினைவிழந்து கிடந்த நீ, நான் பாறையிலிருந்து விழப்போன தருணத்தில் மயக்கம் தெளிந்து முனகி என் கவனத்தைக் கவருவானேன்? சொல்லு! நான் என்ன செய்யட்டும்?"
"பெண்ணே! நீ எந்த ஊரைச் சேர்ந்தவள்? ராமப்பட்டணமா?"
"அங்கேதான் இப்போது குடியிருக்கிறோம்."
"அந்த ஊரில் பவானி என்று ஒரு பெண் வக்கீல் இருக்கிறாளாமே, தெரியுமா?"
கமலா அளவிடமுடியாத ஆச்சரியத்துடன், " ஆமாம், நன்றாகத் தெரியுமே, பவானி அக்காவை!" என்றாள்.
"அக்கா என்று அழைக்கும் அளவு சிநேகமா?" என்று கேட்ட அந்த வாலிபனின் முகம் மலர்ந்தது. இந்தப் பெண் தன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாள் என்ற உறுதியும் பிறந்தது.
"அவளிடம் போய் உனக்கு உமாகாந்தனை நினைவிருக்கிறதா?" என்று கேள். 'நினைவிருக்கிறது ' என்று அவள் சொன்னால் , 'அவன் ஒரு நிமிஷம் உன்னைப் பார்க்க விரும்புகிறான்' என்று கூறி இங்கே அழைத்து வா. ஆனால் யாருக்கும் தெரியவே கூடாது விஷயம்!"
"பவானி உனக்கு உறவா?"
"இதுவரை இல்லை" என்று சோகப் புன்னகை புரிந்தான் உமாகாந்தன். "சிநேகம்தான். நாங்கள் இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவள் உன்னுடன் இங்கே வரவில்லை என்றால் என்னைப் பார்க்க அவளுக்கு விருப்பம் இல்லை என்று புரிந்து கொண்டு என் வழியே போவேன்" என்று கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.
"ஒரு வழியும் போக வேண்டாம். இங்கேயே இரு. அக்காவைக் கண்டிப்பாக அழைத்து வருகிறேன்."
"பவானியை வற்புறுத்த வேண்டாம், நீ" என்றான் உமாகாந்தன். "என்ன இருந்தாலும் நான்