ரொம்பவும் அவமானப் படுத்தி ஏசிப் பேசிவிட்டார் அக்கா!"
கமலா தொடர்ந்து விவரித்ததை யெல்லாம் கேட்ட பவானி, கடைசியில், "அடி அசடே! இதற்காக நீ உயிரை விட நினைத்தது சுத்த தப்பு. கல்யாணம் உண்மையில் உன்னிடம் ரொம்ப ஆசையாக இருக்கிறார். அவர் அம்மாவை நீ கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லையே? அவள் ஏதோ உளறியதற்காக நீ ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றாள்.
"அக்கா! உங்கள் சமாதானம் கொஞ்சம் கூட அர்த்தமுள்ளதாகவோ ஏற்கக் கூடிய தாகவோ இல்லை. ஆனாலும் நீங்கள் எனக்குச் சமாதானம் சொல்கிறீர்களே, அதுவே எனக்குப் பெரிய ஆறுதல். எது எப்படிப் போனாலும் உங்கள் அன்பும் நட்பும் எனக்குக் கிடைக்குமென்றால் அதற்காகவே எத்தனை ஜன்மா வேணுமானாலும் எடுத்து அவற்றில் எத்தனை துன்பங்கள் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். அப்படிப் பார்க்கும்போது நான் உயிரை விட நினைத்தது வடிகட்டின அசட்டுத்தனம்தான்" என்றாள் கமலா.
வீட்டு வாசலில் பவானியின் கார் நின்றபோது அங்கே ஏற்கனவே கல்யாணத்தின் 'டப்பா மாடல்' கார் நின்று கொண்டிருந்தது. "அடடே! கல்யாணம் வந்திருக்கிறார் போலிருக்கிறதே" என்றாள் பவானி.
"அக்கா! தீப்பெட்டிகளுக்கு ரொம்ப நன்றி. மறக்காமல் மருந்து வாங்கிக் கொண்டு போங்கள்" என்று கூறிவிட்டு இறங்கினாள் கமலா.
ஆனால் பவானி அவளை வாசலில் இறக்கிவிட்டுப் போகத் தயாராக இல்லை. "அடி கள்ளி! காதலன் வந்தவுடன் என்னை நைஸாக அனுப்பிவிடப் பார்க்கிறாயா? முடியாது! உள்ளே வந்துவிட்டுத்தான் போவேன்" என்று கூறியபடியே இறங்கினாள் பவானி. உண்மையில் இவ்வளவு கால தாமதமாக வந்ததற்காகக் கமலாவுக்கு 'அர்ச்சனை' நடக்கப் போகிறதே என்ற கவலையில்தான் அவளைப் பின்தொடர்ந்தாள் பவானி.
* * * *
கல்யாணம் ரேழியைத் தாண்டி வந்து நின்றான்.