"தங்கமோ, வைரமோ இந்தப் பெண்ணையே காணோமே" என்று புலம்பினாள் சமையல் அறையிலிருந்து வெளிப்பட்ட காமாட்சி. "வேலை இங்கே எனக்கு இடுப்பு ஒடியறது. அவள் என்னடா வென்றால் பொழுது புலரும்போது 'வத்திப் பெட்டி வாங்கி வருகிறேன்' என்று போனவள்தான்.
மணி பத்தரை ஆகிறது, அவளைக் காணோம். எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது, உங்க அம்மா பேசியது பொறுக்காமல் அவள் எங்கேயாவது குளம் குட்டையைத் தேடிப் போய் விட்டாளோ என்று."
"சேச்சே! அப்படி யெல்லாம் ஒன்றும் இராது. நான் போய்த் தேடிப் பார்த்து அழைத்து வருகிறேன்" என்றான் கல்யாணம்.
இந்தச் சமயத்தில் பவானியும் கமலாவும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள். வந்த இருவரையும் இந்த மூவரும் வியப்புடன் பார்த்தது பார்த்தபடி இருக்க, பவானி சொன்னாள்: "நல்லவேளையாகக் கல்யாணமும் இங்கே இருக்கிறார்! மூவரும் நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்தப் பெண்ணை இனிமேல் தனியாக எங்கேயும் அனுப்பாதீர்கள்! இவள் பாட்டுக்கு எதையோ குருட்டாம்போக்கில் யோசனை பண்ணிக் கொண்டு என் காரிலே வந்து முட்டிக்கொண்டு பயத்தில் மூர்ச்சையாகி விழுந்து விட்டாள். காயம் ஒன்றும் படாமல் கடவுள்தான் காப்பாற்றினார். நல்ல வேளை நான் காரை ரொம்ப மெதுவாக ஓட்டி வந்தேன். சட்டென்று பிரேக் போட்டு நிறுத்தினேன். இவளுக்கு பயம் பாதி, மனக் கிலேசம் பாதி. மயங்கி விழுந்து விட்டாள். காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் போய் ஆசுவாசப்படுத்தி அழைத்து வந்தேன். பெண்ணை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள். கல்யாணம்! உங்களுக்கும்தான் சொல்கிறேன், கமலா இனி உங்கள் பொறுப்பு!"
"நான் அப்பவே போக வேண்டாம்னு முட்டிண்டேன்! 'விசுவை அனுப்புடீ'ன்னேன். கேட்டாளா? இல்லையே! இனிமேல் ஒரு நிமிஷம்கூட இவளை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது!" என்றாள் காமாட்சி.
"அதற்கென்ன இனி கல்யாணம் வைச்சுச் சமாளிக்கிறார்!" என்றாள் பவானி.
----------------
தொடரும்...