(Reading time: 7 - 13 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

சாய்வு நாற்காலியில் சயனித்திருந்த மாசிலாமணி, அந்த இடத்தை விட்டு அசையாமல், "எங்கே வந்தாப்போல?" என்றார்.

  

"சும்மாத்தான், பார்த்து விட்டுப் போகலாம்னு..." என்றான் கல்யாணம்.

  

"பார்த்தாச்சுல்ல?"

  

கல்யாணத்துக்கு ரோஷமாக இருந்தது. 'விருட்'டென்று திரும்பிவிட வேண்டும்போல் இருந்தது. ஆனால் சிரமப்பட்டு அந்த எண்ணத்தை அடக்கிக் கொண்டான். தன் தாயார் மீது தவறு இருக்கலாம்; தானும் அவர்களுக்கு அவமானம் தேடித் தந்தவன்தான். எனவே பல்லைக் கடித்துக் கொண்டு தன்மானத்தை மென்று விழுங்கிவிட்டுப் பேசினான்.

  

"இதைக் கேளுங்க, மாசிலாமணி! நீங்க வருத்தப்படறதிலே நியாயம் இருக்கு. சற்று முன்னால் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருக்கும் விசுவைச் சந்தித்தேன். என் அம்மா நேற்று இங்கு வந்துவிட்டுப் போனதாக அவன் சொன்னான். அவனுக்கு விஷயம் ஒன்றும் சரியாக விளங்கவில்லை. ஆனால் குரல் உயர்ந்து வாக்குவாதம் நடந்தது என்ற அளவுக்குப் புரிந்து கொண்டு சொன்னான். அப்புறம் நீங்க யாரும் இரவு சாப்பிடலை என்றும் கமலா அக்கா அழுதுகொண்டே தனக்கு மட்டும் சாதம் போட்டதாகவும் கூறினான். அதிலிருந்து ஏதோ விபரீதமாக நடந்திருப்பதாகப் புரிந்து கொண்டேன். நான் இப்போ இங்கே வந்ததற்கே அதுதான் காரணம். என்ன நடந்தது என்று நீங்கள் எனக்கு விவரம் ஏதும் சொல்ல வேண்டாம். எனக்கு அதைக் கேட்கப் பிடிக்கலை. என் தாயாரை நீங்க தூஷிக்க நான் கேட்டுக் கொண்டிருப்பது நாகரிகமாகாது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தீர்மானமாக வைத்துக் கொள்ளுங்கள். அன்றைக்குக் கோர்ட்டில் நான் கொடுத்த வாக்குறுதிப்படி நான் நடந்து கொள்ளத் தயார். என் தாயார் என்ன சொல்லி யிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் உங்கள் பெண்ணை நீங்கள் எனக்கு மணம் முடித்துக் கொடுப்பீர்களானால் நான் ஏற்கக் காத்திருக்கேன். அவளை நல்லபடியாக வைத்துக்கொள்வேன். இதனால் என் பெற்றோரிடம் நான் சண்டை போட்டுக் கொள்ள நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டேன். நாளடைவில் என் அம்மாவின் மனம் மாறிவிடும். அவளுக்கு நான் ஒரே பிள்ளை. கமலா தங்கமான பெண் என்பதையும் அவள் சீக்கிரமாகவே புரிந்து கொள்வாள்."

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.