என்றாள்.
கோபாலன் மாடியிலிருந்து கீழே வந்தான். “அம்மா, டாக்டர் வீட்டுக்குப் பூதரச் சொன்னாங்க" என்று சோர்ந்த முகத்துடன் பவானியிடமிருந்து பூச்சரத்தை வாங்கி எடுத்துக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை நோக்கி நடந்தான்.
கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகில் செல்லும் நீளமான தெருவின் கோடியில் இருக்கும் பங்களா டாக்டர் ஸ்ரீதரனுடையது. வாயில் சுவரில் ஒரு புறத்தில் டாக்டர் ஸ்ரீதரன் எம். பி. பி. எஸ். என்கிற பெயரையும், மறுபுறத்தில் ஜெயஸ்ரீ' என்கிற வீட்டுப் பெயரையும் காணலாம்.
டாக்டர் வெளியே போகவில்லை. வீட்டில் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக அவருடைய கார் ’போர்டிகோ'வில் நின்றிருந்தது. ஒன்றிரண்டு நோயாளிகளும் வெளிப்பக்கம் தாழ்வாரத்தில் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர்.
கோபாலன் வராந்தாவில் இருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். டாக்டர் ஸ்ரீதரன் நோயாளி ஒருவரைப் பரிசோதனை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. வாசல் பக்கத்திலிருந்து மாடிக்குச் செல்ல படிகள் இருந்தன. மாடியிலிருந்து மெல்லியதாக ரேடியோ இசை கேட்டுக் கொண்டிருக்கவே மாடிக்குப் போனான் கோபாலன்.
அங்கே இருந்த சோபா ஒன்றில் ஸ்ரீதரனின் தங்கை ராதாவும் ஸ்ரீதரனின் மகள் ஜெயஸ்ரீயும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரில் இருந்த மேஜை மீது கிடந்த பத்திரிகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள் ராதா. கோபாலன் தயங்கிக் கொண்டே ஹாலுக்குள் நுழைந்தான்.
”அம்மா கொடுத்தாங்க" என்று சொல்லிவிட்டு, பூச்சரத்தை மேஜை மீது வைத்து விட்டு நின்றான் கோபாலன.
”அம்மாவுக்கு உடம்பு எப்படி இருக்கு கோபாலா? பூவெல்லாம் தொடுக்க ஆரம்பிச்-சுட்டாங்க போலிருக்கே!" என்று கேட்டுக்கொண்டே ராதா பூச்சரத்தை. எடுத்துக் கத்தரித்து ஜெயஸ்ரீக்கு வைத்துவிட்டுத் தானும் சூட்டிக் கொண்டாள்.