"அவங்க உடம்பு கொஞ்சம் சுமாருங்க. பூ அவங்க கட்டல்லீங்க. ஊரிலிருந்து ஐயாவோட தங்கச்சி வந்திருக்காங்களே, அந்த அம்மா கட்டினாங்க" என்றான் கோபாலன்.
”ஜோராய்க் கட்டி இருக்காங்க. கனகாம்பரம், அதன் பக்கத்தில் ஜாதி, அதன் பக்கத்தில் தவனம், அப்புறம் ரோஜா என்று அழகான கதம்பமாகக் கட்டியிருக்காங்க. நம்ப வீட்டிலேயும் ஏகப்பட்ட பூதான் பூக்கிறது. இந்த மாதிரி எனக்குக் கட்டத் தெரிய-வில்லையே!" என்று ராதா, அந்தக் கதம்பச் சரத்தைப் புகழ்ந்து பேசினாள். பிறகு ரேடியோவை மூடிவிட்டு "நீ எங்கே வந்தே?" என்று விசாரித்தாள்.
”ஐயாவைப் பார்க்க வந்தேம்மா. அம்மாவுக்கு இன்னிக்கு இங்கே வரமுடிய-வில்லையாம். ஊசி போட டாக்டர் ஐயாவையே அங்கே வரச் சொன்னாங்க..."
"சரி ஐயா உள்ளே வந்ததும் தகவலைச் சொல்லுகிறேன்" என்று கூறிவிட்டு ராதா மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள்.
வெளியிலே இருந்த ஒன்றிரண்டு நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து அனுப்பிவிட்டு ஸ்ரீதரன் உள்ளே வந்தார். கைகளை அலம்பிக் கொண்டு மேஜை அருகில் உட்கார்ந்தார் அவர்.
ஜெயஸ்ரீ மாடிப்படிகளில் குதித்து இறங்கி வந்தாள் ”அப்பா! அப்பா! உன்னோட நானும் சுமதி வீட்டுக்கு வரேன்" என்று தன் தகப்பனாரைப் பார்த்துக் கேட் டாள் அந்தப் பெண்.
ஸ்ரீதரன் மகளைத் தம் அருகில் இழுத்து மடியில் உட்கார்த்திக் கொண்டார். ஆசையுடன் அவள் முகத்தைப் பார்த்து, 'ஏனம்மா! நான் ' பேஷண்டை'ப் பார்க்கப் போனால் நீயும் கூட வருவதாவது?" என்று கேட்டார் கொஞ்சலாக.
இதற்குள் சமையலறையிலிருந்து தட்டுக்களில் சிற்றுண்டியும் ’டீ' யும் எடுத்துக் கொண்டு சமையற்காரர் சுவாமிநாதன் வெளியே வந்தார். மேஜை மீது வைத்து விட்டுக் குளிர்ந்த ஜலமும் கொண்டு வந்து வைத்தார். ”குழந்தை என்ன சொல்கிறாள்?" என்று கேட்டார்.