”உம் சரி, நீயே கேளு சுவாமியை! ஒரு டாக்டர் வைத்தியம் பண்ணுவதற்காக நோயாளிகள் வீட்டுக்குப் போனால் கூடவே தம் குழந்தையையும் அழைத்துப் போவாரா என்று கேட்டுப் பாரேன்" என்று குழந்தை யிடம் கூறிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் ஸ்ரீதரன்.
"நான் எல்லோர் வீட்டுக்கும் வருகிறேன் என்று சொல்லவில்லையே அப்பா. அங்கே என் சிநேகிதி சுமதி இருக்கிறாள். அவளைப் பார்க்க வருகிறேன் என்றேன்" என்று அவள் தன் காதுகளில் இருந்த ஜிமிக்கி அசைந்தாடக் கூறி முடித்தாள்.
"என்ன சுவாமி! இவளுக்கு இந்த ஆனியோடு ஒன்பது வயசு பூர்த்தியாகிறது. ஆனால் எப்படிச் சாதுர்யமாகப் பேசுகிறாள் பார்த்தீரா? இவள் தொட்டிலில் உதைத்துக் கொண்டு பாலுக்காக அழுததை நீர் பார்த்திருக்கிறீர். எண்ணெய் தேய்த்துக் கொள்ள இந்த வீட்டைடச் சுற்றி உம்மைத் திணற அடித்தவள் இவள். வக்கணையாகப் பேசத் தெரிந்துவிட்ட....து இப்போது!" என்று ஸ்ரீதரனைப் பார்த்துப் பாதிச் சிரிப்பும் பாதிக் கேலியுமாகச் சொல்லி முடித்தார்.
சுவாமிநாதன் தம் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார். பிறகு நிதானமாக. இன்னொரு பத்து வருஷங்களைத் தள்ளிப் போட்டுப் பாருங்கள். குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிடும். இன்னொரு குழந்தையும் இந்த வீட்டிலே குதிபோடும். நீங்களும் தாத்தா ஆகிவிடுவீர்கள்! ஆனால் உங்கள் சம்சாரம்தான் ஒன்றையும் இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை" என்றார். ஸ்ரீதரன் அப்படியே பிரமை பிடித்தவர் மாதிரி உட்கார்ந்திருந்தார்.
--------------
தொடரும்...