கொண்டான் மூர்த்தி. பிறகு கம்பெனி வேலையாக சைனா பஜாருக்குச் சென்று விட்டு இரவு மவுண்ட்ரோட் ஹோட்டல் ஒன்றில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்தான்.
அடுத்த நாள் அவனும், அவன் நண்பனும் வெளியில் எங்கும் போகவில்லை. அன்று சனிக்கிழமை. விடுமுறை நாள். நண்பர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வாயில் இருந்த சிகரெட்டைப் புகைத்தபடி மூர்த்தி, தன்னுடைய அகில இந்திய விஜயத்தைப் பற்றி அளந்து கொண்டிருந்தன்! பார்த்த இடங்கள் பாதி இருந்தால், பார்க்காத இடங்களையும் அவன் வர்ணித்தபோது தேர்ந்த ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய கற்பா சக்தி இப்படி ஒருவனிடம் வீணாக விரயமாகிறதே என்று தான் எண்ணத் தோன்றும். ஹாஸ்டல் அறைகளில் திடீரென்று நிசப்தம் நிலவியது,
நாலைந்து பெண்கள், அழகாக உடுத்திக் கொண்டு கல கல வென்று பேசியபடி வந்தார்கள். ஒவ்வொரு அறையாக நுழைந்து அங்கிருந்த மாணவர்களிடம் பேசி -டி.ராமாவுக்கு டிக்கெட் வாங்கிக் கொள்ளும்படிக் கேட்டார்கள். கடைசியாக மூர்த்தி இருந்த அறைக்குள் நுழைந்தார்கள் அவர்கள், அவர்களில் ஒரு பெண் படிப்படியாக இருக்கும் கூந்தலை இரட்டைப் பின்னல்களாகப் பின்னி, பாதியில் வெண்ணிற ரிப்பனால் கட்டியிருந்தாள். காதுகளில் ஜிலு ஜிலு வென்று பிரகாசிக்கும் வைரத் தோடும், வைர ஜிமிக்கிகளும் அணிந்திருந்தாள். மூக்கில் ஒன்றும் ஆபரணம் இல்லை. நெற்றியில் வட்ட வடிவ மாகப் பெரிய அளவில் பொட்டு வைத்து. அதன் கீழே சிறிய பொட்டொன்று வைத்திருந்தாள். ரோஜா வண்ணத்தில் ’ஷிபான்' புடவையும், முழங்கை வரையில் கை வைக்கப்பட்டிருந்த சோளியும் அணிந்திருந்தாள் அவள். துரு துரு வென்று அவள் முகம் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தது. கண்களைச் சுழற்றி அவள் புன்னகை புரிந்தவாறு மூர்த்தியையும், அவன் நண்பனையும் கைகுவித்து வணங்கினாள்.
”காசநோய் நிவாரணத்துக்காக டிராமா போகிறோம். இவர்கள் எல்லாம் பி. ஏ. படிக்கும் மாணவிகள் இரண்டு டிக்கெட்டுக்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்” என்றாள் அவள்.
அவர்கள் பதிலையும் எதிர்பாராமல் இரண்டு ஐந்து ரூபாய் டிக்கெட்டுகளைக் கிழித்து மேஜை மீது வைத்தாள் அந்தப் பெண். மூர்த்தி பர்ஸைத் திறந்து நண்பனுக்கும் சேர்த்து பத்து ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினான்.